மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் திருமுருகன் காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
சென்னை ராயப்பேட்டையில் அனுமதியின்றி ஊர்வலம் நடத்தி கலவரம் ஏற்படுத்தும் விதமாகப் பேசியதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக சிறையில் உள்ள அவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன் வயிற்றுப்போக்கு, மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 24-ஆம் தேதி திருமுருகன் காந்திக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டன.
மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருமுருகன் காந்தி, சனிக்கிழமை காலை திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவப் பரிசோதனையில் திருமுருகன்காந்திக்கு உணவுக் குழாய், இரைப்பை, மூச்சுக்குழாய் ஆகிய உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடல் நலம் சீரானதும் ஓரிரு நாள்களில் திருமுருகன்காந்தி சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவார் எனவும் அவர்கள் கூறினர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் திருமுருகன் காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.