தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக புயல் உருவாக வாய்ப்புள்ளது. இதனால் குமரிக்கடல், லட்சத்தீவு, தென்கிழக்கு கேரளம், அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் சனிக்கிழமை (அக். 6) முதல் திங்கள்கிழமை (அக். 8) வரை மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கையையொட்டி, வளி மண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சி நிலவுவதால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் பலத்த மழை வரை பெய்துள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை (அக். 5) குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகக் கூடும். இத் தாழ்வுப் பகுதி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (அக். 6, 7) காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாற வாய்ப்புள்ளது.
எச்சரிக்கை: இதன் காரணமாக குமரிக்கடல், லட்சத்தீவு, தென்கிழக்கு கேரளம், அரபிக் கடல் பகுதிகளுக்கு சனிக்கிழமை (அக். 6) முதல் திங்கள்கிழமை (அக். 8) வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.
மேலும், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் வெள்ளிக்கிழமைக்குள் (அக்.5) கரைக்குத் திரும்ப வேண்டும். வியாழக்கிழமை (அக். 4) முதல் ஞாயிற்றுக்கிழமை (அக். 7) வரை தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.