திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற உள்ள புஷ்கர விழாவின்போது தாமிரவருணி ஆற்றில் தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் பக்தர்கள் நீராட, சூழ்நிலைக்கு ஏற்ப அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மகாதேவன் தாக்கல் செய்த மனு விவரம்: திருநெல்வேலி மாவட்டம் தாமிரவருணி புஷ்கர விழா வரும் அக்டோபர் 12 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவின்போது தாமிரவருணி ஆற்றின் முக்கிய தீர்த்த கட்டங்களான குறுக்குத் துறை, தைப்பூச மண்டபம் ஆகியவற்றில் பக்தர்கள் நீராட தமிழக இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகளும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரும் ஏற்கெனவே தடை விதித்துள்ளனர்.
இந்தத் தடையை நீக்கி பக்தர்கள் புனித நீராட அனுமதித்து உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத் துறை சார்பில், மனுதாரர் குறிப்பிட்டுள்ள இரண்டு இடங்களிலும் புனித நீராட வரும் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்களில் ஆழம் அதிகமாக இருப்பதால் சுழல் ஏற்படும். எனவே, அசம்பாவிதங்களைத் தடுக்கவே தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசு வழக்குரைஞர் தகவல்: இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் எஸ்.ஆர்.ராஜகோபாலன், புஷ்கரம் நடைபெறவிருப்பது மழைக்காலம் என்பதால் தாமிரவருணி ஆற்றின் நீரோட்டத்தைப் பொருத்து தைப்பூசப் படித்துறை மற்றும் குறுக்குத்துறை மண்டபம் ஆகிய இடங்களில் பக்தர்கள் நீராட அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப அனுமதிக்க மாவட்ட நிர்வாகத்துக்கும், காவல்துறைக்கும் அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, புஷ்கரத்தை முன்னிட்டு தாமிரவருணியில் புனித நீராட வரும் பக்தர்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப இந்த இரண்டு படித் துறைகளிலும் நீராட அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.