முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தற்போது வரை நடைபெற்றுள்ள விசாரணை குறித்து இடைக்கால அறிக்கையை ஆணையம் வெளியிட வேண்டும் என்று சசிகலா தரப்பு வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் செய்தியாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான தனிநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையத்தில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், அரசு மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
விசாரணை: ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு சிகிச்சை அளித்த இதய நோய் மருத்துவர் சத்தியமூர்த்தியிடம் புதன்கிழமை விசாரணை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சசிகலா தரப்பு வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது: மருத்துவர் சத்தியமூர்த்தியிடம் நடைபெற்ற விசாரணையில், அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, எங்களது மருத்துவமனை மருத்துவர்களே போதும் என்றும், வேறு மருத்துவர்கள் வேண்டாம் என்றும் ஜெயலலிதா கூறியதாக சத்தியமூர்த்தி தெரிவித்தார். மரணம் என்பது நீண்ட காலம் இருக்கும் நோயின் தன்மையைப் பொருத்தும் அமைகிறது.ஜெயலலிதாவுக்கு பேஸ் மேக்கர் கருவி பயன்படுத்தவில்லை என்றும் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்தார். வழக்குரைஞர் ஜோசப் அளித்த மனு மீதும், ஆணையத்தின் செயலாளர் கோமளாவை மாற்றுவது குறித்து அளிக்கப்பட்ட எங்கள் தரப்பு மனு மீதும் அக்டோபர் 25-ஆம் தேதி விசாரணை நடத்தப்பட உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை நடைபெற்ற விசாரணையின் விவரங்களை ஆணையம் இடைக்கால அறிக்கையாக வெளியிடவேண்டும் என்றார்.