சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை இரவு போதிய நடைமேடைகள் இல்லாத சூழல் ஏற்பட்டதை அடுத்து ஒருசில விமானங்கள் உடனடியாகத் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை இரவு விமானங்கள் தரையிறக்கப்பட்டு நிறுத்துவதற்குப் போதிய எண்ணிக்கையில் நடைமேடைகள் இல்லாமல் போனதை அடுத்து மும்பையிலிருந்து இரவு 11.05 மணிக்கு 142 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானமும், கொல்கத்தாவிலிருந்து 134 பயணிகளுடன் இரவு 11.15 மணிக்கு வந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானமும் பெங்களூருவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன.
அதேபோல் தில்லி, மதுரை, புவனேஸ்வரிலிருந்து வந்த விமானங்களும் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து தாமதமாகத் தரையிறங்கின.
இதனிடையே பெங்களூருவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னைக்கு மீண்டும் திரும்பி வந்தன. வானில் வட்டமடித்த விமானங்களில் பயணித்த பயணிகள் இதனால் அவதிக்குள்ளாயினர்.