புதிய தலைமைச் செயலக விவகாரம் தொடர்பான லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் கடந்த 2011-ஆம் ஆண்டு விசாரணை ஆணையம் அமைத்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரை முருகன் ஆகியோருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு
ரகுபதி ஆணையம் சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்யக் கோரியும், ரகுபதி ஆணையத்துக்கு தடை விதிக்க கோரியும் 3 பேரின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனிநீதிபதி, ரகுபதி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதித்து, ஆணையத்தின் ஆவணங்களை பரிசீலித்து தேவைபட்டால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்ப்ட்டது.
இந்த மனு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சனும், அரசு தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயணும் ஆஜராகி வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு தொடர்பான லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை வரும் அக்டோபர் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.