திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் உற்பத்தி நிலையத்தின் 4-ஆவது உலைக்குத் தேவையான முக்கிய சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ரஷிய நாட்டின் அரசு நிறுவனமான ரொஸாட்டம், தனது துணை நிறுவனமான ஆட்டமனர் ஜோமாஷ் பெயரில் இந்த சாதனங்களை உற்பத்தி செய்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள இயந்திரங்களில், நீராவியில் உள்ள ஈரப்பதத்தைப் பிரித்து அதற்கு கூடுதல் வெப்பமூட்டும் "எம்.எஸ்.ஆர் 1000-1' என்ற சாதனமும் அடங்கும்.
ஏற்கெனவே இரண்டு சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், புதிதாக இரண்டு சாதனங்கள் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இந்த சாதனங்களை ரஷியாவில் உள்ள ஆட்டமனர் ஜோமாஷ் நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றான ஸியோ-போடல்ஸ்க்-கில்தான் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இந்தச் சாதனங்கள் மூலம் டர்பைனுக்கு நுழைவதற்கு முன்னர், அந்த நீராவியில் உள்ள நீர் திவலைகள் விலக்கப்பட்டு, நீராவியின் வெப்பக் கடத்தல் திறன் அதிகரிப்பதுடன், குறைந்த அழுத்த நீராவியிலேயே அதிகபட்ச பலனை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் 47 டன்கள் எடையும், 6 மீட்டர் உயரமும், 4 மீட்டர் விட்டமும் கொண்டவை.
இந்த சாதனங்கள் 30 ஆண்டுகள் வரை உழைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.