முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக திண்டுக்கல் ஐ.லியோனி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் பொதுக் கூட்டம், சென்னை தியாகராய நகர் டாக்டர் சதாசிவம் சாலையில் கடந்த ஜூன் மாதம் 8 -ஆம் தேதி நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திமுக பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்தும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சை பதிவு செய்த போலீஸார், அதன்பேரில் நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட வல்லுநர்களின் கருத்தை கேட்டிருந்தனர்.
சட்டவல்லுநர்கள் ஒப்புதல் அளித்தலின்பேரில், காவல் உதவி ஆய்வாளர் மணிமேகலை, பாண்டி பஜார் காவல் நிலையத்தில் லியோனி மீது புகார் செய்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் லியோனி மீது கடுமையான 5 சட்டப்பிரிவுகளின்கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.