சென்னை: டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களுக்கு அளிக்கும் மருந்துகள் தேவையான அளவுக்கு கைவசம் இருப்பதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், வீடு மற்றும் பொது இடங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும். காலி இடங்களில் மழை நீர் தேங்குவதை தடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. டெங்குவால் கர்ப்பிணிகள், பச்சிளங் குழந்தைகள், முதியவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதால் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நீர் தேங்கினால் அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னையில் டெங்கு பாதித்து இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.