திருவாரூர் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் 2-ஆவது நாளாக ஆய்வு

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் 2- ஆவது நாளாக
திருவாரூரில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில், சிவபுரம் நடராஜர் சிலையை பார்வையிடுகிறார் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல். 
திருவாரூரில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில், சிவபுரம் நடராஜர் சிலையை பார்வையிடுகிறார் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல். 

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் 2- ஆவது நாளாக திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
திருவாரூர் தியாகராஜர் கோயில் வளாகத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு திங்கள்கிழமையும் தொடர்ந்தது. சிலைகளின் பழைய ஆவணங்களுடன் சிலை ஒத்துப்போகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதுவரையில், சுமார் 160 சிலைகள் வரை ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.
இந்த ஆய்வை பார்வையிட்ட, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் செய்தியாளர்களிடம் கூறியது: 
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சிவபுரத்தில் அன்னமுத்து படையாட்சி என்பவரது நிலத்திலிருந்து கடந்த 1951-ஆம் ஆண்டு 6 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அதில், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த சிவபுரம் நடராஜர் சிலையும் ஒன்று. இந்த சிலையானது, சிவபுரத்திலிருந்து தஞ்சாவூர், சென்னை, மும்பை, நியூயார்க் வழியாக லண்டனுக்கு கடத்தப்பட்டுள்ளது. இந்த சிலைகள் 1969-இல் ரூ. 6 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளன. 
பின்னர், நியூயார்க்கிலிருந்து 1973-இல் 9 லட்சம் டாலருக்கு விற்கப்பட்டுள்ளன. இதனிடையே சிலைகள் திருட்டு போனது கண்டறியப்பட்டதை அடுத்து, அதை மீட்க அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து, இந்த சிலைகள் போல மாதிரி புதிய சிலைகள் செய்யப்பட்டு, கோயிலில் வைக்கப்பட்டிருந்தன. இப்போது, அந்த சிலைகளும் எங்கே உள்ளன என தேடிவருகிறோம். 
இந்த சிவபுரம் நடராஜர் சிலையானது, மீட்கப்பட்டது முதல் பாதுகாப்பு கருதி திருவாரூர் சிலைகள் பாதுகாப்பு மையத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. சிவபுரம் கோயிலுக்கு கொண்டு செல்ல வேண்டுமெனில், அங்கு பாதுகாப்பு மையம் அமைக்கப்பட வேண்டும். இதுகுறித்து கடந்த ஓராண்டுக்கு முன்னரே தெரிவித்திருந்தோம். பாதுகாப்பு மையம் அமைக்கவேண்டியது இந்து சமய அறநிலையத் துறையினரே. ஆனால், இதுவரையில் சிலை பாதுகாப்பு மையம் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளோம். 
இதேபோல், நடராஜரின் துணைவியான சிவகாமியம்மாள் சிலை, சோமாஸ்கந்தர் சிலை ஆகியவை இன்னமும் நியூயார்க் சைமன் மியூசியத்தில் உள்ளன. இந்த சிலைகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
திருவாரூர் பாதுகாப்பு மையத்தில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட சிலைகள் இருப்பதால் இவற்றை ஆய்வு செய்ய 20 நாள்களுக்கு மேல் ஆகும். தற்போது இந்த ஆய்வு முடிவடைந்துள்ளது. மீண்டும் சில நாள்கள் கழித்து ஆய்வை தொடங்க உள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com