ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம்: பதிலளிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆண்டுக்கு எத்தனை டன் அரிசி ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது என்பன உள்ளிட்ட கேள்விக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை


ஆண்டுக்கு எத்தனை டன் அரிசி ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது என்பன உள்ளிட்ட கேள்விக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
இதுதொடர்பாக, வேலூரைச் சேர்ந்த செளஜானா என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், என் கணவர் அமர்நாத்தை ரேஷன் அரிசி கடத்தியதாக போலீஸார் கைது செய்தனர். கள்ளச்சந்தை மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் எனது கணவரை சிறையில் அடைக்க கடந்த ஆகஸ்ட் 30 -ஆம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு சட்டவிதிகளைப் பின்பற்றி பிறப்பிக்கப்படவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார். 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மனுதாரரின் கணவர், ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார் எனவும், அவர் பலமுறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.மேலும், கைது செய்யப்பட்ட மனுதாரரின் கணவரிடமிருந்து 13.5 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது. 
ரேஷன் அரிசி கடத்தப்படுவது ஏன்?: இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு ரயில்கள் மூலமாக ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. உயர் அதிகாரிகளின் ஆதரவு இல்லாமல் இது நடைபெறாது. மேலும் பெரிய அளவில் நடத்தப்படும் கடத்தலை கண்டுகொள்ளாத அதிகாரிகள், சிறிய அளவிலான கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்கின்றனர் எனக் கருத்து தெரிவித்தனர். தமிழகத்தில் விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி இருமுறை வேகவைக்கப்படுவதால் அது எளிதில் கெட்டுப் போகாது, இதன் காரணமாக தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு அதிக அளவில் கடத்தப்படுவதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 
அரசு பதிலளிக்க உத்தரவு: பின்னர், தமிழகத்தில் எத்தனை பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன?, அவர்களுக்கு எத்தனை கிலோ அரிசி வழங்கப்படுகிறது?, ரேஷன் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த உணவு வழங்கல் துறை அதிகாரிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?, எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரேஷனில் வழங்கப்படும் அரிசியின் மொத்த அளவு எவ்வளவு?, இலவச அரிசியை சட்டவிரோதமாக கடத்துபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். இவற்றுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் நவம்பர் 1 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com