மதப் பிரச்னைகளை ஏற்படுத்தும் வகையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி கோவையில் பாஜக மகளிரணி சார்பில் சரண கோஷ பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் இருந்து தொடங்கியப் பேரணியை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தொடங்கி வைத்தார். இந்தப் பேரணி பாரதியார் சாலை வழியாக காந்திபுரம் அரசு விரைவுப் பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது.
இதில் கலந்து கொண்ட பெண்கள், சபரிமலையின் பாரம்பரியம், புனிதம் காக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி சரண கோஷம் முழங்கியபடி சென்றனர்.
இந்த பேரணியில் கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் வானதி சீனிவாசன், மாவட்டத் தலைவர் சி.ஆர்.நந்தகுமார் மற்றும் நிர்வாகிகள், பெண்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் இல.கணேசன் கூறியதாவது:
சபரிமலை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவால் பக்தர்கள் கோபமடைந்துள்ளனர். இந்த உத்தரவு மத நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் உள்ளது.
இதற்கு பெண்களே எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சபரிமலையின் பாரம்பரியத்தைக் கவனத்தில் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மறுசீராய்வு மூலம் நல்ல உத்தரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஐயப்பன் மீது பக்தி இல்லாதவர்கள், வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சிலர் ஐயப்பன் கோயிலுக்குச் சென்றுள்ளனர். மதப் பிரச்னையைத் தூண்டும் வகையில் ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற 15 பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். கேரள முதல்வர் உத்தரவிட்டதால்தான் தடியடி நடத்தியதாக அம்மாநில காவல் துறைத் தலைவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, சபரிமலை ஐயப்பன் கோயிலில் கண்ணீர்விட்டு அழுதுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.