முல்லைப் பெரியாறில் தற்போதுள்ள அணைக்குப் பதிலாக புதிய அணையைக் கட்ட ஆய்வு மேற்கொள்ளும் முயற்சியை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ள 123 ஆண்டுக்கால முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசு பராமரித்து வருகிறது.
கேரள மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தைக் காரணமாகக் கூறி, தற்போதுள்ள அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டும் முயற்சியை கேரள அரசு எடுத்து வருகிறது.
அதாவது, புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தின் பரிந்துரையை கேரள அரசு பெற்றுள்ளது.
உச்ச நீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு, இத்தகைய புதிய அணை திட்ட ஆய்வு முயற்சிக்கு எதிரானது; எனவே மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தின் மீது உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடரப்படும் என்று தமிழக அரசின் உயர் அதிகாரி தெரிவித்தார்.