திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் ஆளுயர வெண்கலச் சிலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகஸ்ட் 7-ஆம் தேதி மறைந்தார். அவரின் சிலையை அறிவாலயத்தில் வைக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
மீஞ்சூரை அடுத்த புதுப்பேடு பகுதியில் கருணாநிதியின் 8 அடி உயர வெண்கலச் சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சிற்பிகள் தீனதயாளன், கார்த்திக் ஆகியோர் சிலையை வடிவமைத்து வருகின்றனர்.
கருணாநிதியின் சிலை வடிவமைக்கும் சிற்பி ஏற்கெனவே, அண்ணா, காமராஜர், கண்ணகி, முரசொலி மாறன், சிங்காரவேலர் உள்ளிட்டோர் சிலைகளை வடிவமைத்தவர் ஆவார்.
இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் புதுப்பேடு சென்று, சிலை அமைக்கும் பணியைப் பார்த்தார். கருணாநிதி முகத்தின் நாடி பகுதியில் சிறிய வளைவு வருமாறு அமைக்குமாறு ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.
கருணாநிதியின் சிலை விரைவில் அறிவாலயத்தில் வைக்கப்பட உள்ளது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்பட பல்வேறு நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினுடன் சென்றிருந்தனர்.