சென்னை: தமிழகத்தில் மூன்று நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் நிலவும் நிலக்கரி பற்றாக்குறையைப் போக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி முதல்வர் பழனிசாமி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. எனவே மத்திய அரசு தமிழகத்துக்கு தேவையான நிலக்கரியை ஒதுக்கீடு செய்ய வேணடும்.
உடனடியாக தமிழகத்துக்கு உரிய நிலக்கரியை வழங்குமாறு மத்திய நிலக்கரி அமைச்சகத்துக்கும் ரயில்வே துறைக்கும் உத்தரவிடுமாறு முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், காற்றாலை மின் உற்பத்தி செப்டம்பர் மாதத்தோடு முடிவடைவதால், மின் உற்பத்தி பாதிக்கும் என்றும், மூன்று நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே தற்போது கையிருப்பில் உள்ளது என்றும், உடனடியாக நிலக்கரி வழங்காவிட்டால் தமிழகத்தில் உள்ள மின் நிலையங்களை மூடும் நிலை ஏற்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.