புதுக்கோட்டை மாவட்ட விநாயகர் ஊர்வலத்தில் நீதிமன்றம் மற்றும் காவல் துறையை மோசமான வார்த்தைகளால் விமரிசித்த பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மீது சட்ட வல்லுநர்கள் கருத்தை கேட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது குறிப்பிட்ட ஒரு பகுதியில் மேடை அமைக்க போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. இந்த ஊர்வலத்துக்கு வருகை தந்திருந்த பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா அனுமதி அளிக்காததை கண்டித்து போலீஸாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, உயர் நீதிமன்றம் மற்றும் காவல் துறையை அவர் மோசமான வார்த்தைகளால் விமரிசித்தார்.
அவர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் விடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.
இதுதொடர்பாக அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"நீதிமன்றம் மற்றும் காவல் துறையை மோசமான வார்த்தைகளால் விமரிசித்துள்ளார். நீதிமன்றத்தை விமரிசித்ததற்கு நீதிமன்றமே தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. காவல் துறை மீதும் மோசமான விமரிசனத்தை முன்வைத்த அவர் மீது சட்ட வல்லுநர்களின் கருத்தை கேட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.