புதிதாக 17 துணை மின் நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 17 துணை மின் நிலையங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்
புதிதாக 17 துணை மின் நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 17 துணை மின் நிலையங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
 இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதே போன்று, பல்வேறு துறைகளுக்கான நலத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
 சென்னை தண்டையார்பேட்டை, திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு, சிவகங்கை மாவட்டம் கிருங்காக்கோட்டை ஆகிய இடங்களில் பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடங்கள், மதுரை கிழக்கு சாத்தமங்கலத்தில் சிறுபான்மையினர் நலப் பள்ளி மாணவியர் விடுதிக் கட்டடம், மாணவருக்கான கூடுதல் விடுதிக் கட்டடம் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
 காவலர் குடியிருப்புகள்: மதுரை ஆயுதப்படை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 121 காவலர் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், சென்னை மணலி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை ஆகிய இடங்களில் காவலர் குடியிருப்புகள், ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம், சென்னை தண்டையார்பேட்டையில் இணை ஆணையர் நிர்வாகக் கட்டடம், புதுவண்ணாரப்பேட்டையில் காவலர் சமுதாய நலக் கூடம், கரூரில் ஆயுதப்படைக்கான நிர்வாகக் கட்டடம், திருப்பூர் மாவட்ட காவல் அலுவலகம் உள்ளிட்ட காவல் துறை கட்டடங்களையும், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஆகிய இடங்களில் தீயணைப்பு நிலையக் கட்டடங்களையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
 17 துணை மின் நிலையங்கள்: சென்னை போரூரில் ரூ.245.25 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் திறந்து வைத்தார். மேலும், சென்னை சென்ட்ரல், விருநகர் மாவட்டம் மல்லாங்கிணர், மதுரை எழுமலை, தருமபுரி மாவட்டம் மாம்பட்டி, சோலைக்கொட்டாய், ஈரோடு மாவட்டம் சிவகிரி, கரூர் ரெங்கநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டம் அரையாளம், விழுப்புரம் மாவட்டம் ரெட்டணை, கடலூர் மாவட்டம் சிறுபாக்கம், வேலூர் மாவட்டம் கரிவேடு, திருநெல்வேலி மாவட்டம் ரஸ்தா, தஞ்சாவூர் மாவட்டம் இ.பி.காலனி, புதுக்கோட்டை மாவட்டம் பழைய கந்தர்வகோட்டை, வல்லவாரி, நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் புதிதாக துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com