கும்பகர்ணன் போல் தூங்காமல் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கும்பகர்ணனைப் போல் தூங்காமல் உடனடியாக நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கும்பகர்ணனைப் போல் தூங்காமல் உடனடியாக நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 தமிழக அரசு கடந்த 1989-ஆம் ஆண்டு பொது நூலகத் துறையையும், மாவட்ட நூலகத் துறையையும் இணைத்து ஒரே துறையாக அறிவித்து அரசாணைப் பிறப்பித்தது. இதையடுத்து மாவட்ட நூலகங்களில் முதல்நிலை நூலகர்களாகப் பணியாற்றியவர்களை மூன்றாம் நிலை நூலகர்களாக மாற்றி அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தமிழ்நாடு நிர்வாகத் தீர்ப்பாயம் மனுதாரர்களின் பதவி உயர்வுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிட்டு, பதவி உயர்வு தொடர்பான விதிகளை உருவாக்க உத்தரவிட்டது.
 இந்த நிலையில் தீர்ப்பாய உத்தரவின் அடிப்படையில் 17-ஆண்டுகளுக்குப் பிறகு பதவி உயர்வு விதிகளை வகுத்த தமிழக அரசு அதன் அடிப்படையில் மாவட்ட நூலக அதிகாரிகளாகப் பணியாற்றிய மணிகண்டன் உள்பட 4 பேரையும் நூலகத் துறையின் இரண்டாம், மூன்றாம் நிலை நூலகர்களாக மாற்றி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மணிகண்டன் உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
 வழக்கை விசாரித்த நீதிபதிகள், கல்வித்துறையின் கீழ் மாவட்ட நூலக அதிகாரிகளாக பணியாற்றி வந்த மனுதாரர்களை இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நூலகர்களாக மாற்றி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் குறிப்பிட்ட காலத்துக்குள் பதவி உயர்வு தொடர்பான விதிகளை உருவாக்கியிருந்தால் இந்த வழக்குகள் நீதிமன்றத்துக்கு வந்திருக்காது, நீதிமன்றத்தின் நேரமும் வீணடிக்கப்பட்டிருக்காது. எனவே இனி வரும் காலங்களிலாவது தமிழக அரசு, கும்பகர்ணனைப் போல தூங்காமல் நீதிமன்ற உத்தரவுகளை உடனுக்குடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். 17 ஆண்டுகளுக்குப் பின் பதவி உயர்வு விதிகளை வகுத்த காரணத்தால் மனுதாரர்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மனுதாரர்களுக்கு வழக்குச் செலவாக தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com