சென்னை வள்ளுவர் கோட்டம் ஆர்ப்பாட்டத்தின் போது போலீஸார் மற்றும் முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசிய கருணாஸ் எம்எல்ஏ மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், பங்கேற்ற கருணாஸ் எம்எல்ஏ சர்ச்சைக்குரிய முறையில் போலீஸார் மற்றும் முதல்வர் குறித்து அவதூறாக பேசினார். அதன் விடியோ சமூக வலைதளங்களிலும், செய்திகளிலும் வெளிவந்தன.
இதையடுத்து, யூடியூப்பில் வெளிவந்த காட்சியின் அடிப்படையில் கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீஸார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, கருணாஸின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், கருணாஸ் பேசியது முதல்வரின் கவனத்திற்கு சென்றுள்ளது. சட்டத்தை மீறி யார் பேசினாலும் அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். கருணாஸ் பேசியதற்கான பலனை அவர் அனுபவித்தே ஆக வேண்டும்" என்றார்.