இலங்கைத் தமிழர் விவகாரம்: திமுக-காங்கிரஸ் போர்க் குற்றவாளிகள்: அதிமுக தீர்மானம்

இலங்கைத் தமிழர்கள் படுகொலைக்கு திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசே உடந்தையாக இருந்ததால்
அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை
அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை


இலங்கைத் தமிழர்கள் படுகொலைக்கு திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசே உடந்தையாக இருந்ததால் தொடர்புடையவர்களை போர்க் குற்றவாளிகளாக்கி தண்டிக்க வேண்டுமென அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் கூட்டம், சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:-
திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி செய்த போது, இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு அளித்த உதவிகளைப் பற்றிய ரகசியத்தை இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்ச ஒப்புதல் வாக்குமூலமாக பகிரங்கப்படுத்தி இருக்கிறார். 
ஈழப் போரில் அப்பாவி மக்கள் படுகொலைக்குக் காரணமான திமுக, கருணாநிதி, காங்கிரஸை போர்க் குற்றவாளிகளாக அறிவித்து விசாரிக்க வேண்டுமென கடந்த 2010-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதியன்று ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.
இது குறித்த அனைத்து ரகசியங்களையும் ராஜபட்ச இப்போது பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார். 
இந்தச் சூழ்நிலையில், ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர் படுகொலைக்கும், பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொடூரமாய் கொலை செய்யப்பட்டதற்கும் உடந்தையாய் செயல்பட்ட திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசின் படுகொலைகளை சர்வதேச போர்க் குற்றவாளிகளாக்கி தண்டிக்க வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: மேலும், இந்தக் கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவது குறித்தும், வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல், திருத்தல் பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாகவும், கட்சிப் பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அதிமுக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டமானது கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையிலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற்றது.

வரும் 25-இல் கண்டன பொதுக் கூட்டம்
இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன பொதுக் கூட்டம் வரும் 25-ஆம் தேதியன்று நடைபெறும் என்று அதிமுக அறிவித்துள்ளது.
இது குறித்து, முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கட்சித் தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-சென்னை நந்தனத்தில் ஒய்.எம்.சி.ஏ. திடலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா வரும் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏழு லட்சம் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள், பொது மக்கள் பங்கேற்கவுள்ளனர். அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.
கண்டன பொதுக் கூட்டம்: இலங்கைத் தமிழர் பிரச்னையில் திமுக-காங்கிரஸ் கட்சியினரை சர்வதேச போர்க் குற்றவாளிகளாக அறிவித்து தண்டிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை வலியுறுத்தி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வரும் 25-ஆம் தேதி கண்டனை பொதுக் கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com