தாமிரவருணி ஆற்றில் புஷ்கர விழாவை சிறப்பாக நடத்துவதற்கு ரூ.25 கோடியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும் என விழாக் கமிட்டியின் தலைவர் சுவாமி ராமானந்தா ஒசூரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை தெரிவித்தார்.
தாமிரவருணி நதியில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் 1 கோடி மக்கள் கலந்துகொள்வதால், அவர்களுக்கு அடிப்படை வசதிகளான கழிப்பறை , துணி மாற்றும் அறை, போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக போக்குவரத்து வசதி, சுகாதார வசதி போன்ற பல்வேறு பணிகளைச் செய்ய வேண்டும்.
அதனால், இதனை மாநில அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு விழாவுக்கான நிதி ஆதாரங்களைக் கொடுக்க வேண்டும். மேலும், வரும் அக். 11-ஆம் தேதி இந்த விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாபநாசத்தில் தொடக்கி வைக்கிறார். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், அதேபோல ஆந்திரம், கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் இந்த விழாவில் கலந்துகொண்டு பக்தர்கள் சிறப்பிக்க வருகின்றனர். எனவே, இந்த விழாவைச் சிறப்பாக நடத்துவதற்கு அரசு எல்லா வகையிலும் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்தார்.