தொடக்கப் பள்ளிகளை படிப்படியாக மூடும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஒருங்கிணைந்த பள்ளிகள் உருவாக்க வேண்டுமென்ற முயற்சியில் நாடு முழுவதும் தொடக்கப் பள்ளிகளை படிப்படியாக மூடும் நடவடிக்கையில் நீதி ஆயோக்' ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே போதிய நிதியின்மையால் தொடக்கப்பள்ளிகளில் அடிப்படை கட்டுமான வசதிகள், குடிநீர், கழிப்பிட வசதி, மாணவர்கள் அமர்வதற்கான இடவசதி இல்லாமல் உள்ளன.
பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து வருகிறது. இதைச் சரி செய்வதற்கு போதிய நிதி வசதி, ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு மாறாக, இந்தப் பள்ளிகளை படிப்படியாக மூடிவிடுவது என்பது கண்டனத்துக்குரியது.
இந்த நடவடிக்கை மூலம் தமிழகத்தில் 3,000 பள்ளிகள் உள்பட நாடு முழுவதும் 3 லட்சம் பள்ளிகளை மூடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், எதிர்காலத்தில் தொடக்க கல்வி கடும் பாதிப்புக்குள்ளாகும்.
எனவே, மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் இத்தகைய நடவடிக்கைகளைக் கைவிட்டு தொடக்கப்பள்ளி மற்றும் பள்ளிக் கல்வியை சிறப்பாக வடிவமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.