பாம்பன் பகுதியில் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்ததாகக் கூறி, பிடித்து வந்த மீன்களை மீன்வளத் துறையினர் கடலில் அள்ளி வீசியதற்கு மீனவர்கள் சங்கம் வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தடை செய்யப்பட்டுள்ள இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி சில விசைப்படகுகளில் மீன்பிடித்து வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், மீன்வளத் துறை ஆய்வாளர் கெளதம் மற்றும் மேற்பார்வையாளர் அலெக்ஸ் ஆகியோர் பாம்பன் தெற்குவாடி துறைமுகத்துக்கு வியாழக்கிழமை சென்று, இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்து வந்த விசைப்படகு மீனவர்களிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
அதையடுத்து, இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீனவர்கள் பிடித்து வந்த சூடை மீன், பேச்சாளை மீன் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கடலில் வீசினர். இதைக் கண்ட மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மீன்வளத் துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.
தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தினால் மீன்களைப் பறிமுதல் செய்யலாம் அல்லது அபராதம் விதிக்கலாம். அதை விடுத்து, பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து கஷ்டப்பட்டு பிடித்து வந்த மீன்களை கடலில் வீசியது கண்டனத்துக்குரியது என, மீனவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.