முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட கைதிகளை விடுதலை செய்ய எதிர்ப்புத் தெரிவித்து, குண்டுவெடிப்பில் உயிரிழந்த தலைமைக் காவலரின் மகன் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கூடிய அமைச்சரவை முடிவு செய்தது. அமைச்சர்கள் கையெழுத்திட்ட கோப்பை தமிழக ஆளுநருக்கு மாநில அரசு அனுப்பிவைத்தது. இந்த விவகாரத்தில் இதுவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எவ்வித முடிவையும் அறிவிக்கவில்லை.
ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991-இல் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ராஜீவ் காந்தி உயிரிழந்தபோது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த தலைமைக் காவலர் தர்மனும் உயிரிழந்தார்.
அவரது மகன் ராஜ்குமார் ( 33) தனது தந்தை இறப்புக்குக் காரணமான 7 பேரையும் விடுதலை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை முன் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
சுமார் ஒரு மணி நேரமாக உண்ணாவிரதம் இருந்த ராஜ்குமாரை போலீஸார் சமாதானப்படுத்தி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.