அரசியல் கட்சிகளின் கொடிகளை பொது இடங்களில் சட்ட விரோதமாக நடுவதற்கு நிரந்தர தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசு 4 வார காலத்துக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏ.ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினர் தங்களது கட்சிக் கொடி மரங்களை சாலையோரங்கள், பூங்கா, விளையாட்டு மைதானங்கள், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட இடங்களில் நிரந்தரமாக நடுகின்றனர். மேலும், கட்சியின் கூட்டங்கள் உள்ளிட்ட பிற நிகழ்வுகளுக்கு சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான கொடிகளை நடுகின்றனர். இதனால் சாலைகளின் ஓரங்களில் நவீன இயந்திரங்களைக் கொண்டு குழிகள் தோண்டப்படுகின்றன. இந்தக் குழிகளால் தொலைபேசி இணைப்புகள் மற்றும் மின் கேபிள்கள் பாதிக்கப்படுவதோடு சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இவ்வாறு தோண்டப்படும் குழிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் எந்தவிதமான அனுமதியும் பெறுவதில்லை.
எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசியல் கட்சிகளின் கொடிகளை நிரந்தரமாக அகற்ற உத்தரவிட வேண்டும்.
பொது இடங்களில் கட்சிக் கொடிகளை நடுவதற்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், வருவாய்த் துறைச் செயலாளருக்கு கோரிக்கை மனு அளித்தேன். அந்த கோரிக்கையை இதுவரை பரிசீலிக்கவில்லை. எனவே, பொது இடங்களில் கட்சிக் கொடிகளை சட்ட விரோதமாக நடுவதற்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
4 வார காலத்துக்குள்...: இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக தமிழக அரசு 4 வார காலத்துக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.