கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிகளில் பெற்ற வாராக் கடன்களை வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மறுக்கிறது என தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் பாலாஜி தெரிவித்தார்.
லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர் சங்கத்தின் 34- ஆவது பொது மகாசபை கூட்டம் சேலத்தில் சனிக்கிழமை தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் நரசிம்மன் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில், மாநிலம் முழுவதிலும் இருந்து அந்த வங்கியின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியது:
கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் மூன்று தேசிய வங்கிகளை இணைப்பதாகக் கூறியது தேவையற்றதாகும். இந்த இணைப்பின் மூலமாக நாடு முழுவதும் உள்ள பல ஆயிரம் வங்கிக் கிளைகள் மூடப்படும் சூழல் உள்ளது.
இந்த நடவடிக்கையால் எராளமானோர் வேலைவாய்ப்பை இழக்கும் சூழல் உருவாகும். இந்த இணைப்பின் மூலமாக எந்த ஒரு நலனும் ஏற்பட வாய்ப்பில்லை. இந்த நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். இந்த நடவடிக்கையைக் கண்டித்து ஏற்கெனவே இரு நாள்கள் தர்னா போராட்டம் நடத்தியுள்ள நிலையில், அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் முடிவெடுக்க உள்ளோம். நாடு முழுவதும் தேசிய வங்கிகளில் உள்ள வாராக்கடன் ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் கோடியை வசூலித்தாலே வங்கிகள் நஷ்டம் அடையாது. வாராக்கடன் அதிகளவில் உள்ளதற்கு கார்ப்பரேட் நிறுவனங்களே காரணமாகும்.
பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிகளில் பெற்று செலுத்தாமல் உள்ள வாராக் கடன்களை வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. இந்த விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து, நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றி, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து வாராக்கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.