முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, பேசியதாக வெளியான ஆடியோவில் உள்ளது அவரது குரல்தான் என்று அப்பல்லோ மருத்துவர் உறுதிப்படுத்தியதாக சசிகலா தரப்பு வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான தனிநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர்கள், அரசு மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
குறுக்கு விசாரணை: விசாரணை ஆணையத்தில் ஏற்கெனவே சாட்சியம் அளித்த அப்பல்லோ மருத்துவர்கள் ராமச்சந்திரன், அர்ச்சனா, பிரேமா, சினேகா ஸ்ரீ, செவிலியர்கள் விஜயலட்சுமி, சில்பா, லேப் டெக்னீசியன் நளினி ஆகியோரிடம் சசிகலா தரப்பு வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் திங்கள்கிழமை குறுக்கு விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து, வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது: அப்பல்லோ மருத்துவர்கள் அர்ச்சனா, ராமச்சந்திரன் உள்ளிட்டோரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. அதில், கடந்த 2016-ஆம் ஆண்டு செப். 29-ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டபோது, அவர் பேசியதாக வெளியான ஆடியோ 3 முறை ஒலிபரப்பப்பட்டது. ஆடியோவில் ஜெயலலிதாவுடன் பேசும் குரல் யாருடையது என்று கேட்கப்பட்டது. அது தன்னுடைய குரல்தான் என மருத்துவர் அர்ச்சனா ஒப்புக்கொண்டார். இதன் மூலம் ஆடியோவில் உள்ளது ஜெயலலிதாவின் குரல்தான் என்பது தற்போது உறுதியாகி உள்ளது என்றார்.