சென்னை: சிலைக் கடத்தல் வழக்கை விசாரிக்க சிபிஐ மறுத்துள்ளது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியது தொடர்பாக பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் சிபிஐ இன்று தாக்கல் செய்த பதில் மனுவில், சிலைக் கடத்தல் வழக்கை விசாரிக்க முடியாது என தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், சிபிஐ மறுத்ததற்கான காரணம் குறித்து ஒரு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ தரப்பில், ஆள்பற்றாக்குறை காரணமாக வழக்கை விசாரிக்க இயலாது என்றும், எங்கள் தரப்பில் இருந்து தேவைப்படும் உதவிகள் செய்யத் தயார் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.