தமிழ்நாடு
புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
புதுச்சேரியில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் புதன்கிழமை வாபஸ் பெறப்பட்டது.
புதுச்சேரி அரசுப் போக்குவரத்து கழகத்தில் நிரந்தர ஊழியர்கள் 450 பேரும், ஒப்பந்த ஊழியர்கள் 250 பேரும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. ஊழியர்கள் தரப்பில் இதுதொடர்பாக துறை அதிகாரிகளிடமும் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், அனைத்து தொழிற்சங்கங்களும் செவ்வாய்கிழமை மாலை முதல் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் மாலை 6 மணி முதல் அரசுப் பேருந்துகளின் சேவை முடங்கியது. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளானார்கள்.
இதையடுத்து, அக்டோபர் 6, 12 ஆம் தேதிகளில் ஊழியர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்கப்படும் என புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து புதுச்சேரியில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் புதன்கிழமை வாபஸ் பெறப்பட்டது.