சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை உடனே அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது நினைவைப் போற்றும் வகையிலும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் ஞாயிறு மாலை 3.30 மணியளவில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50-ம் ஆண்டு பொன்விழா மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை உடனே அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி நகரம் முழுவதும் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வில் அவசர வழக்காக இன்று விசாரிக்கப்பட்டது.
அனுமதியின்றி சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டு விட்டன என அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. அதே சமயம் சட்ட விரோதமாக பேனர்கள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிராபிக் ராமசாமி தரப்பு வாதம் நடைப்பெற்றது.
பேனர் வைக்க அனுமதி வழங்கும் போது சட்டவிதிகள், நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் எனக் கூறிய உயர்நீதிமன்றம், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை உடனே அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் பேனர்கள் அகற்றப்பட்டது குறித்த விரிவான அறிக்கையை அக்டோபர் 8-ஆம் தேதி சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறையினர் தாக்கல் வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.