தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் (தனி) தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தெரியவந்துள்ளது. இவர் அதிமுக வேட்பாளர் பொ.சந்திரசேகரனை விட 3,219 வாக்குகள் கூடுதலாகப் பெற்றார்.
சிதம்பரம்(தனி) மக்களவைத் தொகுதியில் 14,79,108 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 11,49,538 வாக்குகள் பதிவாகின. ஆண் வாக்காளர்கள் 7,36,655 பேரும், பெண் வாக்காளர்கள் 7,42,394 பேரும், இதர வாக்காளர்கள் 59 பேரும் வாக்களித்தனர். இது 77.72 சதவீதமாகும். இதில் பெண் வாக்காளர்கள் 80.24 சதவீதம் பேர் வாக்களித்தனர்.
இந்தத் தொகுதியில், திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் பொ.சந்திரசேகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் ஆ.இளவரசன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தி.ரவி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.சிவஜோதி உள்பட 13 பேர் போட்டியிட்டனர்.
தொகுதியில் பதிவான வாக்குகள் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அடுத்த தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எண்ணப்பட்டன. 23 சுற்றுகள் முடிந்த நிலையில், தொல்.திருமாவளவன் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மு.விஜயலட்சுமி அறிவித்தார்.
இதனையடுத்து கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு எண்ணும் மையத்தின் வெளியே பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.