விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு பழனி நகரசபையில் கவுன்சிலராக இருந்தபொழுது எவ்வளவோ முயற்சி செய்தும் குடிதண்ணீர் சப்ளையை விரைவில் கொண்டு வர முடியவில்லை. சென்னையிலிருந்த மேல் அதிகாரிகளிடமிருந்து அனுமதி கிடைக்கத் தாமதமாகி வந்ததுதான் அதற்கு காரணம்.
சில நாட்களுக்குப் பின் அது சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் பழனிக்கு வருகை தந்தார். அவருக்கு ஒரு விருந்து கொடுக்கப்பட்டது. அந்த அதிகாரிக்கு மட்டும் விருந்தில் குடிப்பதற்கு உப்புத் தண்ணீர் ஒரு டம்ளரில் வைப்பதற்கு ஏற்பாடு செய்துவிட்டார் ஜி.டி. நாயுடு. சாப்பிடும்பொழுது அந்த அதிகாரி டம்ளரில் உள்ள தண்ணீரை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தவர் "சே என்ன இது, ஒரே உப்புத் தண்ணீர்! இந்த ஊரில் நல்ல தண்ணீரே கிடைக்காதா?'' என்றார் வெறுப்புடன்.
பக்கத்தில் இருந்த ஜி.டி. நாயுடு'' இந்த ஊரில் இருப்பது ஒரே குளம்தான். துணி துவைப்பதும் ஆடு, மாடுகளைக் குளிப்பாட்டுவதும், ஊரிலுள்ள சாக்கடை நீர் வந்து சேருவதும் இங்குதான். அதனால் தான் அந்த குளத்து நீரை வைக்கவில்லை. உப்புக்கரிக்கும் கிணற்று நீரை வைத்தோம்'' என்றார். உடனே அந்த அதிகாரி சென்னை சென்றவுடன் சில நாட்களில் பழனிக்குக் குடிதண்ணீர் சப்ளை கொண்டு வருவதற்கு விரைவான ஏற்பாடுகளைச் செய்தார்.
- எம்.ரெங்கராஜன், மதுரை.