முகம் தெரியாத பலர் நமக்கு உதவி செய்தால் நாம் நன்றி சொல்லி இருக்கிறோம். தெரிந்தவர்கள், உறவினர்கள் உதவினால் கூட இதே நன்றியை நாம் வார்த்தையால் வழங்கி இருக்கிறோம். இன்றைய இளைஞர்களுக்கு நன்றியின் பெருமையை நயமாக எடுத்துரைக்கும் மனோதத்துவ நிபுணர், மருத்துவர் கண்ணன் கிரீஷ். இவர் இதுவரை 68 ஆயிரம் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியருக்கு நன்றியின் மகத்துவத்தை எடுத்துரைத்து அவர்களை நல்ல குடிமக்களாக மாற்றி உள்ளார் என்று தைரியமாகக் கூறலாம். இதற்காக குடியரசுத் தலைவர் கையால் விருதையும் பெற்று உள்ளார் .
மனம் சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்களை அவர் கூற நாம் கேட்போம்:
"இன்று இளைஞர்களின் மனதைக் கெடுக்கும் விஷயங்கள் பல இருக்கின்றன. 24 மணிநேரத்திற்கு அவன் கூடவே இருப்பது கைபேசி. அதில் தான் இருக்கவே இருக்கிறது இன்டர்நெட், அதன்மூலம் facebook (முகநூல்), வாட்ஸ்அப் என்று மனதை மற்றும் கண்களைத் தூங்க விடாமல் செய்கின்றன. இதில் பெற்றோருக்கு நன்றி சொல்ல நேரம் எங்கே இருக்கிறது?
நான் மனோதத்துவ நிபுணர் ஆன பிறகு கல்லூரியிலும் பள்ளிகளிலும் மாணவியருக்கு பயிற்சி வகுப்புகள் எடுக்க ஆரம்பிதேன். அந்த பயிற்சி வகுப்பின் கடைசி நாள் "நன்றி சொல்லும் நாள்' என்று வைத்துள்ளோம். அவர்கள் தங்களது தந்தையாருக்கோ தாயாருக்கோ ஒரு நன்றிக் கடிதம் எழுதச் சொல்வோம். பல பேர் அந்த சமயம் அழுது இருக்கிறார்கள். அவர்கள் நன்றி சொல்லும் நிலையைப் பார்த்து பல முறை நாங்கள் கலங்கி இருக்கிறோம். இந்த மனம் சம்பந்தப்பட்ட பயிற்சி அந்த இளம் உள்ளங்களுக்கு ஓர் ஆறுதலாகவும், அவர்கள் விரும்பும் பல்வேறு விஷயங்களைச் சொல்லும் வடிகாலாகவும் மாறிவிட்டதுதான் உண்மை.
உதாரணமாக, ஓர் இளைஞன் தனது 13 ஆவது வயதில் மதுவின் தாக்கத்தினால், தனது தந்தையார் அவனது அம்மாவின் கைகளை வெட்டியதைப் பார்த்து இருக்கிறான். அன்றிலிருந்து தந்தையார் மீது தாங்காத வெறுப்பு, கோபம். எவ்வளவோ முறை அம்மாவைப் பார்த்தாலும், அப்பாவை பார்க்க மனம் விரும்பியது இல்லை. 8 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் மனதின் பயிற்சி வகுப்பில் நன்றி சொல்லும் கடிதம் அவருக்கு எழுத, அது தாயிடம் படித்துக் காட்டப்பட, தாயும் மதுவின் காரணமாகத்தான் தந்தை அப்படி செய்தார் என்ற நிலையை எடுத்துக் கூற, நன்றிக் கடிதம் அவர்கள் மூவரையும் பாசத்தால் இணைத்து விட்டது. மூன்று பேருமே என்னிடம் வந்து தாங்கள் சந்தோஷமாக இருப்பதை சொல்ல, அவர்கள் போலவே நானும் சந்தோஷப்பட்டேன். காரணம், எனது பயிற்சி வகுப்பின் மூலம் இப்படி பலர் நன்மை அடைந்துள்ளனர். இன்று அந்த இளைஞர் ஒரு IT கம்பெனியில் நல்ல நிலைமையில் வேலை பார்க்கிறார் .
நம் பெற்றோர்களை நாம் காப்பாற்றினாலே பாதி பிரச்னை முடிந்து விடும். இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். இவை எல்லாவற்றையுமே நாங்கள் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவ மணிகளுக்கு புரியும் வண்ணம், அவர்கள் விரும்பும் வகையில், சொல்லும்பொழுது அவர்கள் தங்களையே உணர்ந்து கொள்கிறார்கள். இவை எல்லாமே பாட திட்டங்களைப் போல் இல்லாமல் வாழ்க்கையின் பக்கங்களாக அவர்கள் விரும்பும் வண்ணம் அளிக்கிறோம். வாழ்க்கை பாடத்தை அவர்களுக்கு சுவையாக இருக்கும் வண்ணம் நாம் செய்து விட்டால் இந்த நாட்டின் சிறந்த குடிமக்களாக அவர்கள் மாறிவிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்த ஆண்டு வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் (WORLD HEALTH ORGANISATION -WHO) வழங்கிய விருதை குடியரசு தலைவரின் கையால்
Award of Excellence சென்ற ஏப்ரல் மாதம் பெற்றேன். சில ஆண்டுகளுக்கு முன் பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி புது டெல்லியில் என் சேவையைப் பாராட்டி ஒரு விருது அளித்தார். இந்த ஆண்டு எனக்கு Pride of Tamil Nadu என்ற விருது கிடைத்தது. இப்படி விருது வாங்குவது ஒரு புறம் இருந்தாலும், நல்ல குடிமக்களை உருவாக்கும் இந்த பயிற்சி வகுப்புகள் மூலம் ஒவ்வொரு மாணவ, மாணவியும் பிற்காலத்தில் தன் பெற்றோருக்கு நன்றி சொல்லும் நேரம் வந்தால், அதை விட சந்தோஷம் எனக்கு வேறெதுவும் இல்லை.
-சலன்