தீபாவளி மலர் சாதனை!
எழுத்தாளரும் பத்திரிகை ஆசிரியருமான விக்கிரமன் அமுதசுரபி பத்திரிகையின் ஆசிரியராக இருந்த காலத்தில் 2002- ஆம் ஆண்டு வரை மொத்தம் 52 தீபாவளி மலர்களைத் தயாரித்திருக்கிறார். ஒரே ஆசிரியர் இவ்வளவு தீபாவளி மலர்களை இதுவரை தயாரித்ததில்லை. மலர் தயாரிப்பில் இது ஒரு சாதனையாகும்.
கல்கி பத்திரிகையின் சாதனை!
1942-ஆம் ஆண்டிலிருந்து இந்த 2017- ஆம் ஆண்டு வரை (1948, 1977, 2009 ஆண்டுகள் தவிர) தனி வெளியீடாக தீபாவளி மலர் புத்தகம் வெளியிட்டு வரும் பத்திரிகை கல்கி. இதுவரை 72 தீபாவளி மலர்களை வெளியிட்டிருக்கும் கல்கிதான், தமிழ் பத்திரிகை உலகில் அதிக தீபாவளி மலர்களை வெளியிட்ட பத்திரிகையாகும்.
காகங்களுக்கு பூ
நேபாள நாட்டில் தீபாவளியன்று காகங்களுக்கு தயிர் சாதம் வைப்பார்கள். காகங்கள் தயிர் சாதத்தைத் தின்று கொண்டிருக்கும்போது அவற்றின் மீது உதிரிப்பூக்களைத் தூவுவார்கள். காகங்களின் மீது பூக்கள் பட்டால், அந்த ஆண்டு முழுவதும் நல்லது நடக்கும் என நம்புகிறார்கள்.
தீபாவளி - முன்னாள் பிரதமர்!
நமது முன்னாள் பிரதமர்களில் ஒருவரான மொரார்ஜி தேசாய் சிறுவயதிலிருந்தே தீபாவளி கொண்டாடுவது இல்லை. ஒரு முறை தீபாவளி கொண்டாடும் பொழுது அவருடைய பன்னிரெண்டு வயது தங்கை பட்டாசு வெடித்து காயம்பட்டு இறந்து போனார். அந்த இழப்பு காரணமாக அது முதல் மொரார்ஜி தேசாய் தீபாவளியைக் கொண்டாடியதே இல்லை.
- சின்னஞ் சிறுகோபு
பீகாரில் துடைப்பத்தைக் கொளுத்தி போடும் வழக்கம்
பீகாரில் தீபாவளியின்போது பழைய பொருள்களைக் கழித்து வீட்டை சுத்தம் செய்வார்கள். பிறகு ஒரு துடைப்பத்தைக் கொளுத்தி வீட்டிற்கு வெளியே போடுவார்கள். இவ்வாறு செய்வதால் "மூதேவி' வெளியேறி வீட்டிற்குள் "சீதேவி'யான லட்சுமி வருவாள் என்பது நம்பிக்கை.
மேற்கு வங்காளத்தில் 14 வகை கீரை சமையல்!
மேற்கு வங்காளத்தில் தீபாவளி அன்று துர்க்கைக்குரிய பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. வீடு மற்றும் கடைகளில் மாவிலைத் தோரணம் கட்டி வாயிலை அலங்கரிக்கிறார்கள். மாலையில் தீபங்களால் இல்லத்தை அழகுப்படுத்துவார்கள். பட்டாசு வெடிப்பதும் உண்டு. தீபாவளியன்று 14 வகை கீரை சமைத்து உண்பது விசேஷம். தீப அலங்காரம் செய்யும்போது வரிசைக்கு 14 விளக்குகளாவது வைக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.
-முக்கிமலை நஞ்சன்