கண்டது
• (புதுக்கோட்டை மாவட்டம் வேம்பங்குடியில் ஒரு டிராக்டரில்)
தேங்காய் செல்வம்
ப.விஸ்வநாதன், கீரமங்கலம்.
• (காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெருவிலுள்ள ஒரு சைவ - அசைவ உணவகத்தின் பெயர்)
Eat Me
கே.அகிலாண்டம், காஞ்சிபுரம்.
• (கடலூரில் உள்ள ஒரு சூப் கடையின் பெயர்)
எலும்பு நிபுணன்
இரா.ரமேஷ்பாபு
• (கிருஷ்ணகிரி அருகே உள்ள ஓர் ஊரின் பெயர்)
அரசு ஆடவர்
கா.சீனிவாசன், மாடரஅள்ளி.
கேட்டது
• (கன்னியாகுமரி மாவட்டம் பறக்கையில் இரு நண்பர்கள்)
"மாப்ளே, ஆறு மாதத்தில் "ஆடி' கார் வாங்கிடுவேன்''
"மச்சி நீ ஒரு நாள் ஆடினாலே பார்க்க முடியாது. ஆறு மாதம் ஆடினால் எவன் பார்ப்பான்''
சு.நாகராஜன், பறக்கை.
• (இராமநாதபுரம் அரண்மனை அருகே இரு நண்பர்கள்)
"உன் பேர் என்ன... மறந்து போச்சே''
"ராமேஸ்வரம்''
"என்னப்பா இது, ராமேஸ்வரம்னு எல்லாம் பேர் வச்சுக்கிட்டு?''
"ஏன் காசின்னு பேர் வைத்துக் கொள்ளும்போது ராமேஸ்வரம்னு வைத்துக் கொள்ளக் கூடாதா?''
கே.முத்தூஸ், தொண்டி.
எஸ்எம்எஸ்
வாழ்க்கையில் எவ்வளவு கிடைச்சாலும்
இன்னும் பெஸ்டா எதிர்பார்க்கிறதுதான்...
நாம நாசமா போறதுக்குக் காரணம்.
அ.ப.ஜெயபால், கொள்ளிடம்.
யோசிக்கிறாங்கப்பா!
செடி, கொடிக்குப்
பெயர் தெரியாத வரை...
நமக்கு எல்லாம் அவை அரிய வகை மூலிகைதான்.
என்.கோமதி, திருநெல்வேலி.
அப்படீங்களா!
ஜப்பானில் உள்ள SHIKEN COMPANE என்ற நிறுவனம் SOLADEYJ3X என்ற பெயரில் டூத் பிரஷ் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த டூத் பிரஷ் சூரிய ஒளி மின்சாரத்தால் இயங்கக் கூடியது. இந்த டூத் பிரஷில் இருந்து எலக்ட்ரான்கள் வெளிப்படுகின்றன. அவை வாயில் உள்ள பாக்டீரியா கிருமிகளை அழித்துவிடுகிறது. இதைப் பயன்படுத்துவதால், வேறு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லையாம்.
என்.ஜே., சென்னை-69.