பேராசை மிக்க டாக்டர் ஒருவர் அதிகக் கட்டணம் கிடைக்கும் நோயாளிகளாகப் பார்த்துத்தான் வைத்தியம் பார்ப்பார்.
ஒரு ஏழைக் குடியானவன் தனது மனைவிக்கு உடல் நலம் சரியில்லை என்று டாக்டரிடம் அழைத்து வந்தான். டாக்டர் நோயாளியைப் பரிசோதிப்பதற்குப் பதிலாக குடியானவனின் பண நிலை பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினார். குடியானவன் அந்த அளவுக்கு வசதியில்லாதவன் என்று தெரிந்ததும், "வேறு டாக்டரிடம் உன் மனைவியை அழைச்சிட்டுப் போ'' என்று கூறிவிட்டார். குடியானவன் மிக அதிகமாகக் கெஞ்சவே, வேறு வழியின்றி வைத்தியம் பார்க்க டாக்டர் ஒத்துக் கொண்டார். எனினும் குடியானவனின் மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை. அவள் இறந்துவிட்டாள். குடியானவனிடம் டாக்டர் சிகிச்சைக்கான பணத்தைக் கேட்டார். குடியானவன் மறுத்துவிட்டான்.
டாக்டர் குடியானவன் மீது வழக்குத் தொடர்ந்தார். நீதிபதி டாக்டரைப் பார்த்துக் கேட்டார்:
"குடியானவன் மனைவியை நீங்கள்தான் கொன்றீர்களா?''
"இல்லை''
"நீங்கள்தான் அவன் மனைவியைப் பிழைக்க வைத்தீர்களா?''
"இல்லை''
"அப்படியானால் குடியானவன் மனைவிக்கு நீங்கள் எந்த வைத்தியமும் செய்யவில்லை. அதனால் குடியானவன் உங்களுக்கு ஒரு பைசா கூட தரத் தேவையில்லை''
ஆதினமிளகி, வீரசிகாமணி.