ஒரு நாட்டின் அரசன், நாட்டைச் சுற்றிப் பார்க்க அவ்வப்போது வெளியிடங்களுக்குச் செல்வான். சென்ற இடத்தில் தங்கி மறுநாள் வேறு இடங்களுக்குச் செல்வான். ஆனால் எங்கே சென்றாலும் அதிகாலையில் சூரியன் முகத்தில் விழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
ஒருமுறை வெளியூர் ஒன்றில் தங்கி இருந்தபோது அதிகாலையில் சூரியனைப் பார்க்க அரசன் நினைத்தபோது, ஒரு பிச்சைக்காரன் அரசனுக்கு எதிரில் வந்துவிட்டான். அதனால் கோபமடைந்த அரசன் பிச்சைக்காரனைத் திட்ட வேகமாக நடந்தபோது, கல் தடுக்கி கீழே விழுந்து சிறிய காயம் ஏற்பட்டுவிட்டது.
பிச்சைக்காரனை அரண்மனைக்கு இழுத்துவரச் செய்து, அவனைத் தூக்கிலிடும்படி கட்டளையிட்டான்அரசன். பிச்சைக்காரன் அதைக் கேட்டவுடன் விழுந்து விழுந்து சிரித்தான். எல்லாரும் பிச்சைக்காரனை ஆச்சரியமாகப் பார்க்க, அரசன் கோபத்துடன், "ஏன் சிரிக்கிறாய்?'' என்று கேட்டான்.
பிச்சைக்காரன் சொன்னான்: "அரசரே... நீங்கள் என் முகத்தில் விழித்ததினால் உங்களுக்குச் சிறுகாயம்தான் ஏற்பட்டது. ஆனால் நான் உங்களுடைய முகத்தில் விழித்ததினால், என் உயிரே போகும்நிலை வந்துவிட்டது. நான் இறந்த பிறகு, காலங்காலமாக மக்கள் உங்களைப் பற்றி "அந்த அரசன் முகத்தில் விழித்தால் போதும். உடனே சாவுதான்'' என்று சொல்வார்கள். அதை நினைத்ததும் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது'' என்றான். அரசன் உடனே பிச்சைக்காரனை விடுதலை செய்தான்.
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.