அறிவியலுக்கு அப்பால் 22: கற்பனைக் கரு!

​கதைகளுக்கான கரு கற்பனையில் உதிக்கலாம். ஆனால், கருத்தரித்தல் என்பதே முழுக் கற்பனையாக இருக்க முடியுமா லண்டனிலிருந்து வெளியாகும் டெய்லி மெயில்
அறிவியலுக்கு அப்பால் 22: கற்பனைக் கரு!

கதைகளுக்கான கரு கற்பனையில் உதிக்கலாம். ஆனால், கருத்தரித்தல் என்பதே முழுக் கற்பனையாக இருக்க முடியுமா லண்டனிலிருந்து வெளியாகும் டெய்லி மெயில் (Daily Mail) பத்திரிகையில் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் நாள் ஒரு சுவாரஸ்யமான செய்திக் குறிப்பு வந்தது. பிரேசில் நாட்டின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள கபே ஃபெரோ (Cabe Fero) என்னும் ஊரிலிருந்து செவிலித் தாய்கள் புடை சூழ, வயிற்றில் 41 வாரக் கருவைச் சுமந்திருப்பதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்ட ஒரு பெண்மணி, தாய்மைக்கான எல்லா அறிகுறிகளும் காணப்பட்டு எப்போது வேண்டுமானாலும் பிரசவம் நடக்கும் என்று கருதப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாள். அந்தப் பெண்மணியை மருத்துவர்கள் பரிசோதித்த போது குழந்தையின் இருதயத் துடிப்பைத் தவிர மற்ற எல்லா அளவுகோல்களும் சரியாக இருந்தன. கருவின் இருதயத் துடிப்பைக் கேட்க முடியாத காரணத்தால் அச்சமுற்ற மருத்துவர்கள் அந்தப் பெண்மணிக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்தபோது அவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. அந்தப் பெண்மணியின் கருவறை முற்றிலும் காலியாக இருந்தது.

மூளையைப் பற்றிய ஆராய்ச்சியில் மிகப் பெரிய சாதனைகளைப் படைத்து வரும் அறிவியலாளராகிய வி.எஸ்.ராமசந்திரன் அவர்கள் எழுதிய "ஃபான்டம்ஸ் இன் த ப்ரெய்ன்' (Phantoms in the brain)  என்னும் நூலில் ஒரு உண்மைச் சம்பவம் வெகு அற்புதமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அது பின் வருமாறு:
1932-ஆம் ஆண்டில் ஓர் அந்தி சாயும் நேரத்தில் டாக்டர் மன்றோவின் (Dr.Monroe) மருத்துவமனைக்கு 32 வயது மதிக்கத்தக்க மேரி நைட் (Mary Knight) என்னும் பெண்மணி வந்தாள். 9 மாதக் கருவைத் தன் வயிற்றில் சுமந்து கொண்டிருப்பதாகவும், ஓரிரு மணி நேரங்களாக வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை உதைப்பதைத் தன்னால் உணர முடிகிறது என்றும், தனக்குப் பிரசவத்திற்கான நேரம் நெருங்கிவிட்டதாகத் தோன்றுவதாகவும் டாக்டர் மன்றோவிடம் மேரி நைட் தெரிவித்தாள். உடனே, டாக்டர் மன்றோ அந்தப் பெண்மணியை பரிசோதிக்கத் தொடங்கினார். 9 மாதக் கர்ப்பத்தின் அறிகுறியோடு பெருத்திருந்த அந்தப் பெண்மணியின் வயிறு கொஞ்சம் கீழே இறங்கியிருப்பதைப் பார்த்ததும் குழந்தை வெளியே வரத் தயாராக இருக்கிறது என்று டாக்டர் மன்றோ எண்ணினார். மேரி நைட்டின் பால் சுரப்பிகள் உட்பட உடலின் எல்லாப் பாகங்களிலும் கருத்தரித்து இருப்பதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. 

ஸ்டெதஸ் கோப்பைக் கொண்டு மேரி நைட்டை டாக்டர் பரிசோதித்த போது குழந்தையின் இருதயத் துடிப்பை மட்டும் அவரால் உணர முடியவில்லை. குழந்தை ஒரு வேளை வேறு பக்கமாக திரும்பியிருந்து அதனால் அதன் இருதயத் துடிப்பை கேட்க முடியாமல் போனதோ என்று ஐயமுற்ற டாக்டர் மன்றோ, பல விதமான கோணங்களில் அந்தப் பெண்மணியைப் பரிசோதித்தார். எப்படிப் பரிசோதித்தாலும் அந்தப் பெண்
மணியின் வயிற்றுக்குள் இன்னொரு உயிர் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. 

எனவே, அந்தப் பெண்மணியின் கர்ப்பம் வெறும் கற்பனையில் உருவானதாக இருக்கலாம் என்று டாக்டர் மன்றோ சந்தேகித்தார். உள்ளடங்கி இயல்பான நிலையில் இருந்த அந்தப் பெண்மணியின் தொப்புள் அந்தச் சந்தேகத்தை உறுதி செய்தது. இப்போது டாக்டர் மன்றோவுக்கு மிகப் பெரிய தர்மசங்கடம் ஏற்பட்டது. மேரி நைட் கொண்ட கருத்தரிப்பு, அவளுடைய வயிற்றில் அல்ல, கற்பனையில் மட்டுமே! என்னும் உண்மையை அவளிடம் எப்படிச் சொல்வது? என்று திகைத்தார் டாக்டர் மன்றோ. அப்படியே அவர் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில் அவள் இல்லை. 

எனவே, தனது அறையில் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்த டாக்டர் மன்றோ ஒரு முடிவுக்கு வந்து அந்தப் பெண்மணியைப் பிரசவம் பார்க்கும் அறைக்கு அழைத்துப் போனார். பிரசவம் உடனடியாக நடந்து விடும் என்றும், அவளுடைய வலியைக் குறைப்பதற்காக மயக்க மருந்து (Ether) கொடுக்க வேண்டும் என்றும் சொல்லிவிட்டு டாக்டர் மன்றோ அந்தப் பெண்மணிக்கு மயக்க மருந்து அளித்தார். 

பின்னர் மயக்கம் தெளிந்து மேரி நைட் கண் விழித்தபோது கண்களில் கண்ணீர் மல்க டாக்டர் மன்றோ அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவளுடைய குழந்தை இறந்தே பிறந்ததாகவும், அவர் கொண்ட முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போய் விட்டதாகவும் சொன்னார். அதைக் கேட்டுத் தேம்பித் தேம்பி அழுத மேரி நைட் அடுத்த நாளைக்குள் தன்னை தேற்றிக் கொண்டாள். தெரிந்தே பொய் சொன்ன டாக்டர் மன்றோவுக்கு அடுத்த நாள் மிகப் பெரிய ஆச்சரியமும், அதிர்ச்சியும் காத்திருந்தது. 

ஒரு நாள் முன்னதாகப் பெருத்த வயிற்றுடன் மருத்துவமனைக்குள் வந்த மேரி நைட்டின் வயிறு, பிரசவத்திற்குப் பிறகு வற்றிப்போகும் வயிற்றைப் போல், வற்றிப் போய் இருந்தது. அந்த வற்றிப் போன வயிறே டாக்டர் மன்றோ சொன்ன பொய்யை அந்தப் பெண்மணிக்கு உண்மை என்று நம்ப வைத்தது. எது எப்படியோ, நல்லவேளையாக அந்தப் பெண்மணியின் பிரச்னைக்கு தீர்வு கண்டுவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் அவளை டாக்டர் மன்றோ வீட்டிற்கு அனுப்பி வைத்தார். ஆனால், டாக்டர் மன்றோவின் மகிழ்ச்சி ஒரு வாரம் தான் நீடித்தது. 

ஒரு வாரத்திற்குப் பின், பழையபடியே பெருத்து கீழே இறங்கிய வயிறுடன் திரும்பி வந்த மேரி நைட் டாக்டர் மன்றோவைப் பார்த்து, ""என் வயிற்றிலிருந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்றைத்தான் தாங்கள் வெளியே எடுத்தீர்கள். அது இறந்து விட்டது. இரண்டாவது குழந்தை வயிற்றுக்குள் என்னை உதைத்துக் கொண்டு இருக்கிறது'' என்று சொல்லித் தன் வயிற்றைக் காட்டிய போது டாக்டர் மன்றோவுக்குத்தான் மயக்கம் 
வந்தது. 

ஒரு பெண்மணி, தான் கருத்தரித்திருப்பதாக நம்புவதும், கற்பனை செய்து கொள்வதும், அல்லது சந்தேகிப்பதும் இயல்புக்கு மாறான விஷயம் அல்ல. அந்த எண்ணமும் சந்தேகமும் மனதளவில் நின்றுவிடும் வரை, அவை வியப்புக்குரியதாக ஆவதில்லை. 
ஆனால், அப்படி நம்பும் பெண்மணியின் உடலில் உண்மையாகவே கருத்தரிக்கும் பெண்களுக்குரிய எல்லா மாற்றங்களும் நிகழும்போது அது மருத்துவயியலுக்குப் புரியாத புதிராக போகின்றது.

அமெரிக்காவில் பிலடெல்பியாவில் (Philadelphia)  1829 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி பிறந்து மிகப் புகழ் பெற்ற மருத்துவராக விளங்கி, 1914 இல் காலமானவர் டாக்டர் சிலாஸ் வெய்ர் மிட்செல் (Silas Weir Mitchell) ஆவார். தான் கருத்தரித்து இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு அந்தக் கற்பனையின் விளைவாகத் தன் உடலில் 9 மாதங்களுக்கு எல்லா விதமான மாற்றங்களையும் கொண்டு வரக்கூடிய ஒரு பெண்மணியின் மனோநிலைக்கு டாக்டர் சிலாஸ் வெய்ர் மிட்செல் அளித்த பெயர் "சூடோசையசிஸ்' (Pseudocyesis)  (சிதம்பரநாதன் செட்டியாரைக் கொண்டு சென்னை பல்கலைக் கழகத்தால் தயாரிக்கப்பட்ட ஆங்கிலம் தமிழ் அகராதியில் இச்சொல்லுக்கான இணைச் சொல் தரப்படாத காரணத்தால் "சூடோசையசிஸ்' (Pseudocyesis) என்னும் சொல்லுக்கு நான் எண்ணிப் பார்த்த இணைச் சொல்தான் கற்பனைக் கரு). 

கற்பனைக் கருவைப் (சூடோசையசிஸ்) பற்றி ஆராய்ச்சி செய்த மருத்துவர்கள், பல்வேறு சமூகக் காரணங்களால் தாய்மையே ஒரு பெண்ணின் அடையாளம் என்றும் கருத்தரிக்க இயலாமை என்பது பாவத்தின் சின்னம் என்றும் நம்பும் சூழலில் வளர்ந்து மிகப் பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்கள் இப்படிப்பட்ட நிலைமைக்கு ஆளாகிறார்கள் என்று கண்டுபிடித்தார்கள். 

ஆனால், மருத்துவயியல் அறிஞர்களுக்கு இன்னமும் முழுமையாகப் புலப்படாத விஷயம் என்னவென்றால் மனத்தளவில் தான் கருவுற்று இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளும் ஒரு பெண்ணின் உடலில், மாத விலக்கு நிற்பது, காலைப்பித்தம், பால் சுரப்பிகளின் தயார் நிலை உட்பட எப்படி எல்லா விதமான மாற்றங்களும் தானாக நிகழ்கின்றன என்பது தான்! விஞ்ஞானிகளைக் குழப்பும் இன்னொரு விஷயம் என்னவென்றால், சில சமயங்களில் ஆண்களுக்கும், ஏன் விலங்குகளுக்கும் கூட கற்பனைக் கரு 
தோன்றுகிறது. இது எப்படி? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com