* திருவண்ணாமலை, திருவிடைக்கழி, சாயாவனம் ஆகிய தலங்களில் வில்லும் அம்பும் ஏந்தி தரிசனம் தரும் முருகப்பெருமானைத் தரிசிக்கலாம். வில்லேந்தி நிறகும் முருகனை "தனுசு சுப்ரமணியர்' என்பர்.
* கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கும் முருகப்பெருமான், தன்னுடைய திருக்கரங்களில் கத்தி, கேடயம் ஆகியவற்றுடன் கோழி ஒன்றை ஏந்தியபடி காட்சியளிப்பது சிறப்பாகும்.
* கும்பகோணம்- சென்னை நெடுஞ்சாலையில் உள்ள அணைக்கரையில் உள்ள ஐயனார் கோயிலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை வாகனம் உள்ளது. ஐயனாரின் பரிவாரத் தெய்வங்களோடு இராவுத்தர் என்பவரும் இடம் பெற்றுள்ளார். இந்த ராவுத்தர் தூண்டிலுடன் காட்சியளிக்கிறார். இஸ்லாம் மார்க்கத்தைச் சேர்ந்தவர் ஐயனார் கோயிலில் பரிவாரத் தெய்வமாக வழிபாடு செய்யப்படுவது மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகும்.
* கொடுமுடியில் உள்ள கொடுமுடிநாதர் திருக்கோயிலில் சிவலிங்கத்தின் மீது அகத்தியர் கைவிரல் தடம் உள்ளது. அகத்தியர், சிவனைக் கட்டித் தழுவிய தழும்பு லிங்கத்தின் மீது உறைந்திருப்பதைக் காணலாம்.
- கே. பிரபாவதி