அன்பே வடிவான சிவபெருமான் அவ்வப்போது தோன்றி பல அதிசயத் திருவிளையாடல்களை நிகழ்த்தித் தன் அடியார் பெருமக்களின் பெருமையை உலகறியச் செய்துள்ளான். அவ்வகையில் ஆன்மீக நெறியோடு வாழ்ந்து கணிதொழில் (ஜோதிடம்) செய்யும் கணிகரின் புகழை உலகறியச் செய்ய இறைவன் திருவிளையாடல் புரிந்த இடம்தான் கணிச்சம்பாக்கம் என்னும் பேரூராகும்.
சென்னை. - கும்பகோணம் சாலையில் விக்ரவாண்டி தாண்டி கெடிலம் ஆற்றைக் கடந்து சென்ற பின் சித்திரச்சாவடி என்னும் இடத்திற்கு வெகு அருகில் அமைந்துள்ளது இத்திருத்தலம். பாடல் பெற்ற திருவதிகை திருத்தலத்திற்கு வடக்கே உள்ளது. கணி, கணிச்ச, கணிசம், கணிச்சி என்ற காரணப்பெயர்களை ஆராய்ந்தால் எவ்வகையிலும் சிவபெருமானுக்குத் தொடர்பான ஊராகவே "கணிச்சம்பாக்கம்' விளங்கி வந்திருக்கிறது என்பதை வரலாற்றுச் செய்திகள் மூலம் அறியலாம்.
சுமார், 1500 ஆண்டுகளுக்கு மேல் பழைமையாக விளங்கும் இத்திருத்தலத்தில் உள்ள ஆலய தொடர்புடைய கல்வெட்டுக் குறிப்புகள் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் காணலாம். இறைவன் பெயர் கணீஸ்வரர், கணிச்சபுரீஸ்வரர், கணிச்சநாதர் என்ற திருநாமங்களிலும், அம்பிகை பெரிய நாயகி என்ற திருநாமத்திலும் வழங்கப்படுகிறார்கள். கலிபுருடனான சனீஸ்வரனை தன் புத்திசாதுர்யத்தினால் தன்னை நெருங்க விடாமல் பண்ணியதால் இத்தல விநாயகர் "கலிதீர்த்தவிநாயகர்' எனச் சிறப்புப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றார். வெற்றிவேல் முருகன், கலியுக சண்டேசர் சந்நிதிகளையும், சுயம்புவாகத் தோன்றிய வேங்கை தலமரத்தையும் இங்கு தரிசிக்கலாம். மூலவர் பின்புறம் பார்வதி தேவி, பரமேஸ்வரன் திருமணக் கோலத்தை சுதை சிற்ப வடிவமாகக் காணலாம். இது கண்டு தரிசிக்க வேண்டிய காட்சி.
ஒரு சிவாலயத்திற்கு உரிய அனைத்து விசேஷ தினங்களும் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன. இவ்வாலயத்தில், ஜாதகத்தை சுவாமி பாதத்தில் வைத்து வழிபட்டால், நாள்பட்ட நோய்கள் நீங்கும் எனவும், கிரகதோஷங்கள் விலகி, வாழ்வில் ஏற்படும் சிரமங்கள் குறையும். வாழ்க்கையில் அதிசயிக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என்றும் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கின்றனர்.
தொடர்புக்கு: 94436 66413/ 99946 53232.
- க. கிருஷ்ணகுமார்