பொதுவாக, சிவன் கோயில்களில் சிவபெருமானைப் பார்த்த நிலையில் தான் நந்தி இருக்கும். ஆனால் பெண்ணாடம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி, சிவபெருமானைப் பார்க்காமல் திரும்பி வாசற்படியை நோக்கி இருக்கிறது.
பழங்காலத்தில் பெண்ணாடம் பகுதியில் கடும் மழை திரண்டது. இதனால் வெள்ளம் ஊரில் புகுந்துவிட, மக்கள் அங்கும் இங்கும் ஓடி, இறுதியில் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் தஞ்சம் புகுந்தனர். வெள்ளம் கோயிலை நோக்கி வந்தது. வெள்ளத்திலிருந்து காப்பாற்றுமாறு பிரகதீஸ்வரரை வேண்டினர் மக்கள்.
இந்த அபயக்குரலைக் கேட்ட சிவபெருமான், நந்தியைப் பார்த்து, "நந்தியே! அந்த மழை நீரைக் குடித்துவிடு!'' என்று ஆணையிட்டார். உடனே, நந்தி திரும்பி, திரண்டு வந்த மழைவெள்ளம் முழுவதையும் குடித்துத் தீர்த்துவிட்டது. அதன்பிறகு நந்தி பழைய நிலைக்கு மாறவில்லை.
- போளூர் சி.ரகுபதி