திருமகளின் ஆசை நிறைவேறிய திருத்தலம்!

மனிதன் எப்போதுமே ஆசை வசப்படுபவன்தான். அதனால்தான் பந்த பாசங்களில் சிக்கி பாவங்களை செய்து கர்ம வினைகளில் அகப்பட்டு பிறகு இறைவனின் கருணையால் வீடு பேறு அடைகிறான்.  
திருமகளின் ஆசை நிறைவேறிய திருத்தலம்!

மனிதன் எப்போதுமே ஆசை வசப்படுபவன்தான். அதனால்தான் பந்த பாசங்களில் சிக்கி பாவங்களை செய்து கர்ம வினைகளில் அகப்பட்டு பிறகு இறைவனின் கருணையால் வீடு பேறு அடைகிறான்.  

மனிதர்கள் மட்டுமல்ல தெய்வங்கள் கூட சில சமயங்களில் இதுபோன்று ஆசைபடுவதும் துன்பப்படுவதும் உண்டு என்பதை நாம் புராணங்கள் மூலமாக அறிய முடிகிறது. அப்படி அலைமகளாம் திருமகளின் நியாயமான ஆசையை நிறைவேற்றித் தந்ததொரு திருத்தலம், திருநின்றியூர்.

இது அப்பர், சுந்தரர், சம்பந்தரால் பாடல்பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 19-ஆவது திருத்தலமாக விளங்குகின்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெரும் சிறப்புகளைக் கொண்ட இத்தலம், இந்திரன், அகத்தியர், பரசுராமன், ஐராவதம், பசு, சோழமன்னர்கள் வழிபட்டுப் பேறுபெற்ற தலமாகும். கடனில் தத்தளித்து, பொருள் பற்றாக்குறையோடு ஏங்கி வாழும் மக்களின் குறைதீர வரமருளும் ஒப்பற்ற திருத்தலம் திருநின்றியூர் ஸ்ரீலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்.

1,300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இவ்வாலயம் தருமபுர ஆதீனத்திற்குட்பட்டது. திருமகள், திருமாலின் திருமார்பில் நீங்காதிருக்க வரம்வேண்டி ஈசனை வழிபட்டுப் பேறுபெற்றதால் திருநின்றியூர் என்றும் திருமாலுக்கு ஸ்ரீநிவாசன் என்ற பெயர் ஏற்படக் காரணமானதால் திருமகள் ஈசனுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிசெலுத்தும் வகையில் திருநன்றியூர் என்றும் பெயர்பெற்றது.

திருநின்றியூர் என பெயர்வர மற்றொரு காரணமும் உண்டு. சிதம்பரம் நடராஜரை தினமும் தரிசித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான் சோழமன்னன் ஒருவன். அப்படி ஒருநாள் திரும்பிவரும்போது காவலாளிகள் கொண்டு சென்ற தீப்பந்தங்கள் அணைந்துவிட்டன.

அதனை மீண்டும் எரிய வைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. அவர்கள் இத்தலத்தைக் கடந்தபோது தானாகவே தீப்பந்தங்கள் எரியத்தொடங்கின. தொடர்ந்து இது நடக்கலாயிற்று. காரணம் புரியாமல் அனைவரும் திகைத்தனர். ஒருசமயம் இப்பகுதியில் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்த இடையனிடம், "இங்கே மகிமையான நிகழ்ச்சிகள் நிகழுமா'' எனக் கேட்டான் மன்னன். அதற்கு அவன், "மன்னரே, இந்தப் பகுதியில் லிங்கம் ஒன்றுள்ளது. அதில் நான் மேய்க்கும் பசுக்களில் சில தானாகவே சென்று பால் சொரிகின்றன'' என்றான். மன்னனும் அவ்விடம் சென்று சிவலிங்கத்தைக் கண்டான்.

அதனை வேறிடத்தில் வைத்து கோயில் கட்டுவதற்காக அகழ்ந்தபோது ரத்தம் வெளிப்பட்டது. வெளியே எடுக்கும் முயற்சி தோற்றது. இச்சம்பவம் நடைபெற்றது அனுஷ நட்சத்திர தினத்தில். பின் அங்கேயே அனுஷ நட்சத்திர நாளில் கோயில் எழுப்பி வழிபட்டான் மன்னன். பந்தத்தின் திரி அணைந்து, பின் தானே எரிந்து நின்றதால் திரிநின்றியூர் என பெயர் வந்ததாகக் கூறுகின்றனர்.

தந்தை ஜமதக்னி முனிவரின் ஆணைக்கிணங்கி, தாய் ரேணுகா தேவியின் தலையைக் கொய்தார் பரசுராமர். இதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க பரசுராமரும், ஜமதக்னி முனிவரும் திருநின்றியூர் திருத்தலத்தை அடைந்து வணங்கினர். சிவபெருமான் காட்சிதந்து தோஷமகற்றி, வெட்டுண்டு மாய்ந்த தாய்க்கு அமாவாசை திதியில் மேன்மையருளினார். இன்றும் அமாவாசை திதியன்று இறந்தவர்களுக்கு சாந்தியும், சந்தோஷமும் தர இத்தலத்தில் பூஜை புரிந்தால் பூரண பலனுண்டு என்கின்றனர். 

கார்த்திகை மாதம் முழுவதும் ரேணுகாம்பாளுடன் ஜமதக்னி மகரிஷியும் பரசுராமரும் இத்தலத்தில் பூஜை புரிகின்றனர் என்று சொல்லப்படுகிறது. "வித்தை பெருக, கீர்த்தி மிகுந்துவர, எண்ணிய மணாளனை அடைந்து இன்பம் பெற, தாய், தந்தையர் நீண்ட ஆயுளுடன் வாழ, மூதாதையர் ஆஸ்தி விருத்தி அடைய, வெளிநாடு சென்று பெருந்திரவியம் சேர்க்க, நீண்டகாலம் இளமைப் பொலிவுடன் வாழ, இத்தலத்தில் மயில்வாகனத்தில் அமர்ந்தருளும் ஸ்ரீவள்ளி தேவயானை சமேதரான சுப்ரமணியரை பரிபூரண சரணாகதி அடைந்துவிட்டால் போதும், அனைத்து காரியங்களும் சித்திக்கும்' என்கிறது அகத்திய ஜீவநாடி.

இத்தலத்திலுள்ள செல்வ கணபதி சகல சம்பத்துகளுக்கும் அதிபதி. சகல மேன்மைகளையும் தரவல்லவர். செல்வகணபதி சுவாமியை அனுஷ நட்சத்திர நாளில் தொழுதவர்க்கு செல்வச்செழிப்பு கிட்டுமென்பது உண்மை.

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவுகளுடன் செல்வாக்கோடு வாழ்வார்கள். அந்தஸ்துள்ள பதவிகளில் இருப்பார்கள். அரசாங்க பாராட்டும் பெறுவார்கள். பிறர் குணமறிந்து செயல்படுவதில் வல்லவர்கள். ஊர் ஊராக சுற்றும் குணம்கொண்ட இவர்கள் அடிக்கடியோ, அனுஷ நட்சத்திர நாளிலோ, தங்களது பிறந்த நாளிலோ, திருமண நாளிலோ இத்தல ஈசனுக்கு வழிபாடுகள் செய்தால் வாழ்வு சிறக்கும்.

அனுஷ நட்சத்திர ஆண்கள் துவாதசி திதியன்றும், பெண்கள் வரலக்ஷ்மி நோன்பன்றும் வழிபாடுகள் மேற்கொண்டால் கூடுதல் நன்மைபயக்கும். அனைத்து ராசியினரும் அனுஷ நட்சத்திர நாளில் வழிபாடுகள் மேற்கொண்டால் பயம், பாவம் மற்றும் நோய் நீங்கி சகலமேன்மையுடன் வாழ்வர் என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் பாடியிருக்கிறார். அதில் மிகமுக்கியமானது என்னவென்றால், சிவனுக்கு அபிஷேகம் செய்து, சந்தனக்காப்பிட்டு, அதில் மாதுளை முத்துக்களைப் பதித்து வழிபாடு செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது உறுதி. மாதுளை முத்துக்கள் மாணிக்கக் கற்களையொத்தது. திருமகள் இந்த மாதுளம் முத்துக்களில் வாசம் செய்கின்றாள். இதனால் சிவபெருமானை அபிஷேம் செய்து, அர்ச்சித்தால் சம்பத்துகள் குறைவின்றிச் சேரும் என்பது காகபுஜண்டர் வாக்கு.
(தொடர்ச்சி அடுத்த இதழில்..)
- அறந்தாங்கி சங்கர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com