கங்கை நதி ஓடும் புனிதத் திருத்தலமான காசியில் மணிகர்ணிகா துறைக்கு அருகில் அமைந்துள்ளது "மணிகர்ணிகேஸ்வரர்' திருக்கோயில். இதன் அருகில் இருக்கும் ஒரு வீட்டின் முற்றத்தில் ஒரு சிவலிங்கம் எழுந்தருளியிருப்பதை தரிசிக்கலாம். இந்த லிங்கமூர்த்தியை தீபப் பிரகாசர்' என்றும் "ஜோதிரூபேஸ்வரர்' என்றும் அழைப்பர். இவரின் சந்நிதியில் தேவலோகத்தைச் சார்ந்த அப்சரஸ் பெண்கள் தீபமேற்றி வழிபட்டு பேறுபெற்றதாக "காசிபுராணம்' சொல்கிறது. இங்கு தீபங்கள் ஏற்றி வழிபடுவதுடன் தீப தானமும் செய்வதால் செல்வ வளம் கிட்டும் என்பது நம்பிக்கை!
காசியைப் போன்றே காஞ்சிபுரத்திலும் தீபப்பிரகாசர் அருள்புரியும் கோயில் உள்ளது. பிரம்மன், சரஸ்வதியைப் பிரிந்த காலகட்டத்தில் பெரிய யாகம் ஒன்று நடத்த முற்பட்டார். இதை அறிந்த சரஸ்வதிதேவி கோபம் கொண்டாள். யாகத்தை அழிக்கும் நோக்கில் "வேகவதி' எனும் நதியாக மாறி பாய்ந்து வந்தாள். இதை அறிந்த பிரம்மன் யாகத்தைக் காக்கும்படி திருமாலை வேண்டினார். அவரது வேண்டுகோளை ஏற்ற திருமால், பேரொளியாக நின்று நதியைத் தடுத்தார். மேலும், பிரம்மனின் யாகத்துக்கு இடையூறு நேரக்கூடாது என்று சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இப்படியே பேரொளியாகி நின்றதால் திருமாலுக்கு "தீபப்பிரகாசர்' என்ற பெயர் ஏற்பட்டது. அவர் வழிபட்ட லிங்கத்தை "விளக்கொளி நாதர்' என்றும் "தீயேஸ்வரர்' என்றும் அழைப்பர்.
இத்திருக்கோயில் காஞ்சிபுரம் பிள்ளையார் கோயில் தெருவில் அமைந்துள்ளது. இங்கு வந்து தீபப்பிரகாசர் முன்னிலையில் தீபம் ஏற்றி வழிபட்டால் தீவினைகள் அகலும், சகல நன்மைகளும் உண்டாகும் என்பர்.
- டி.ஆர். பரிமளரங்கன்