* தூக்கத்தை வென்றவனே! எல்லா உயிர்களின் இதயத்தில் இருக்கும் ஆத்மா நான். உயிர்களின் ஆரம்பமும் நடுவும் முடிவும் நானே.
- பகவத்கீதை 10.20
* இந்த ஆத்மா ஒருபோதும் பிறந்ததில்லை, இறந்ததும் இல்லை; உண்டாகி மீண்டும் இல்லாமல் போவதும் இல்லை. இது பிறப்பற்றது, இறப்பற்றது, நிலையானது, பழைமையானது. ஆதலால் உடல் கொல்லப்பட்டாலும் ஆத்மா கொல்லப்படுவதில்லை.
- பகவத்கீதை 2.20
* பிறந்தவனுக்கு மரணம் நிச்சயம், இறந்தவன் பிறப்பது உறுதி. பரிகாரம் காண முடியாத இந்த விஷயத்தில் நீ கவலைப்படுவது பொருந்தாது.
- பகவத்கீதை 2.27
* ஆத்மாவை (கத்தியால்) வெட்ட முடியாது, (நெருப்பால்) எரிக்க முடியாது, (நீரால்) நனைக்க முடியாது, (காற்றால்) உலர்த்தவும் முடியாது. இது எங்கும் நிறைந்தது, என்றென்றும் இருப்பது, நிலையானது, அசைவற்றது, புராதனமானது.
- பகவத்கீதை 2.24
* உபகாரமே நட்புக்கு அறிகுறியல்ல; அபராதமும் விரோதத்தின் லட்சணம் அல்ல. நல்லெண்ணமா, கெட்ட எண்ணமா என்ற மனநிலை ஒன்றுதான் சரியான காரணம்.
- பஞ்சதந்திரம்
* பகவானுக்கும் பக்தர்களுக்கும் இடையில் வேற்றுமை இல்லை.
* பக்திக்கு இடையூறு விளைவிக்கும் தீயவர்களின் உறவை எந்த வகையிலும் விட்டுவிட வேண்டும். ஏனென்றால் அப்படிப்பட்ட தீயவர்களின் தொடர்பு காமம், கோபம், அறிவு மயக்கம், நினைவு தடுமாற்றம், புத்தி அழிவு இப்படி எல்லாவிதமான அழிவுகளுக்கும் காரணமாகிறது. இவைகள் (காமம், கோபம் முதலியவை) முதலில் தோன்றும் அலைபோல சிறிய வடிவத்தில் தோன்றி, பிறகு தீயவர் உறவினால் கடலைப்போல் விசாலமான உருவத்தைப் பெறுகின்றன.
- நாரத பக்திசூத்திரம்
* காக்கையின் மலம்போல் போகப் பொருள்களில் சகிக்க முடியாத வெறுப்பு ஏற்படுவது, தீவிர உலகப்பற்றின்மை (வைராக்கியம்) எனப்படும்.
- வேதாந்த சங்கரஹம்