தமிழ் வளர்த்த மதுரையை தலைகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த அதிவீர பராக்கிரம பாண்டியனை ஒருமுறை ஜோதிடர் ஒருவர் சந்தித்துப் பேசினார். மன்னனின் ஜாதகத்தைப் புரட்டிப் பார்த்த அந்த ஜோதிடரின் முகத்தில் திடீரென்று ஒரு மாற்றம்..!
"மன்னனை நாகம் தீண்ட வேண்டும் என்று ஜாதகத்தில் உள்ளதால் நாகம் தீண்டும்' என்று கூறி நாளையும் குறித்தார். இதைக்கேட்டு வருந்திய மன்னன் வருத்தத்துடன் தனது அந்திம காலத்திற்குள் இறைவனுக்கு சேவை செய்ய வேண்டும் என்று எண்ணி, நாடு முழுவதிலும் உள்ள முக்கிய கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்தான்.
இறுதியாக, குருவாயூர் வந்து சேர்ந்தான் அதிவீரபராக்கிரம பாண்டியன். அங்கு குருவாயூரப்பனின் தெய்வீகக் கோலத்தைக் கண்டு வணங்கி மகிழ்ந்தான்.
இறைவழிபாட்டில் முழுவதும் மூழ்கிப்போன பாண்டியனுக்கு பாம்பு தன்னைத் தீண்டும் என்பதை மறந்தே போனான்.
ஒருகட்டத்தில் பாம்பு தம்மைத் தீண்டவில்லை என்பதை உணர்ந்து மீண்டும் அந்த ஜோதிடரை வரவழைத்தான். பாம்பு எதுவும் தம்மைத் தீண்டாததால் ஜோதிடர் சொன்னது பொய்யா? என்று கேட்டான்.
ஜோதிடர் மீண்டும் மன்னனின் ஜாதகத்தை ஆராய்ந்து, தான் முன்பு சொன்ன பலனில் எந்தப் பொய்யும் இல்லை என்றுகூறி, மன்னனை ஏற்கெனவே பாம்பு தீண்டியுள்ளது என்றார். மன்னன்,"நாகம் தீண்டி எவ்வாறு உயிரோடு இருக்க முடியும்..?' என்று நினைத்தான். பாண்டிய மன்னனை சோதித்துப் பார்த்தபோது பாம்பு தீண்டியது தெரிய வந்தது.
அதிசயித்துப்போன மன்னன் தம்மை காப்பாற்றியது குருவாயூரப்பனின் செயல்தான் என்றுணர்ந்தான். அதற்கு பிரதிபலனாக, குருவாயூரப்பன் ஆலயத்தில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுத்தான். குருவாயூர் மட்டுமல்லாது கேரளாவிலுள்ள பல கோயில்களுக்கு பாண்டிய மன்னர்கள் கும்பாபிஷேகம் செய்து தெய்வீகம் வளர காரணமாக இருந்தனர் என்று குருவாயூரப்பனின் தலப்புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எல். நஞ்சன்