திருச்சிக்கு அருகில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெறும் தைப்பூச விழாவின் பத்தாம் நாள் பூசத்தன்று ஸ்ரீமாரியம்மன் சமயபுரம் கோயிலிலிருந்து புறப்பட்டு, ஸ்ரீரங்கம் தலத்துக்கு வடபுறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு எழுந்தருள்வாள். அப்போது, ஸ்ரீ ரங்கநாதர் மூலம் தன் தங்கையான ஸ்ரீ மாரியம்மனுக்கு "பிறந்த வீட்டு சீர்வரிசை' வைபவம் நடைபெறும். ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலிலிருந்து மணியக்காரர், யானையின் மீது மாரியம்மனுக்கு சீர்வரிசை கொண்டு வருவார். பட்டாடை, பரிவட்டம், மஞ்சள், சந்தனம், குங்குமம், மலர் மாலைகள், தாம்பூலம், தேங்காய்கள், பழங்கள் முதலியவற்றை கொள்ளிடம் ஆற்றின் கரையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மாரியம்மன் முன் சமர்ப்பித்து, கவரி வீச, சகல மரியாதைகளுடன் சகோதரிக்கு அண்ணன் ரங்கநாதர் சார்பில் சீர்வரிசை நிகழ்ச்சி நடைபெறும். இந்த வைபவத்தில் குடும்ப சமேதராக பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் திருவருள் ஆசி பெறுவார்கள்.
- டி.ஆர். பரிமளரங்கன்