கற்பனைக்கும் எட்டாத அருள்தரும் சிவசக்தித்தலம் காளிகாம்பாள் கோயில். கி.பி 1639- ஆம் ஆண்டுக்கு முன்பே இவ்வாலயம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.
சென்னை என்று இந்த நகருக்குப் பெயர் வரக் காரணமாக இருக்கும் அன்னை குடிகொண்டிருக்கும் தலம். வீர சிவாஜியும், மஹாகவி பாரதியாரும் வழிபட்ட தலம் என்ற எண்ணற்ற பெருமைகளையும் கொண்டது தான் சென்னை காளிகாம்பாள் திருக்கோயில்.
சென்னை, தம்பு செட்டி தெருவிலே நாம் விரும்பும் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றும் காமாட்சியாய், தீயவர்களை அழிக்கும் காளிகாம்பாளாய், உலகையாளும் தேவியாய், கொலு வீற்றிருக்கிறாள் அந்த பராசக்தி. அவள் குங்குமம் பெற்றாலே முக்தி. இந்த அன்னையை வணங்கினால் "சக்தி' மட்டுமல்ல பதவி உயர்வு, திருமணம், குழந்தை பாக்கியம் என்று பக்தர்கள் கேட்கும் எதையும், கேட்பதற்கு முன்பாகவே அள்ளி அள்ளித் தருபவள் இந்த தேவி.
இந்த காளிகாம்பாளை வணங்கினால் பாவ மூட்டைகள் எல்லாம் தொலையும், தடைப்பட்ட பதவி உயர்வும் தானாய்த் தேடி வரும்.
பிரசித்தி பெற்ற இத்திருத்தலத்தில் ஆடிப்பெருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது. (20.07.2018 முதல் 14.09.2018 வரை) ஒன்பது வெள்ளிக்கிழமைகளில் மாலை 6.00 மணியளவில் உற்சவர் ஸ்ரீ காளிகாம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவமும், அதைத்தொடர்ந்து பத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (22.07.2018 முதல் 23.09.2018 வரை) காலை 11.00 மணியளவில் பால், இளநீர், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர், பஞ்சாமிர்தம், புஷ்பங்கள் என ஒவ்வொரு வாரமும் 108 குடம் கொண்டு மூலவர் ஸ்ரீ காளிகாம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற உள்ளது.
இப்பெருவிழாவில் அன்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஸ்ரீ காளிகாம்பாளின் திருவருளைப் பெற்றுய்யலாம்.
தொடர்புக்கு: 044 2522 9624.
- ஏ.கே. பார்வதி