கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றி விரதம் இருப்பதன் பலனை தேவி புராணம் விரிவாகக் கூறுகிறது. ஒருமுறை அம்பிகை மகிஷாசுரனுடன் போர் புரிந்தபோது தவறுதலாக சிவலிங்கம் ஒன்றை உடைத்து விட்டாள், அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்ய கார்த்திகை தீபம் ஏற்றி விரதம் இருந்தாள். கார்த்திகை சோமவாரம் அனுஷ்டிப்பவர்கள் இறைவனின் அருளினால் சகல மேன்மைகளையும் பெறுவர். கார்த்திகை விரதத்தை தவறாமல் பன்னிரண்டு வருஷம் கடைப்பிடித்து நாரத முனிவர் சப்த ரிஷிகளுக்கும் மேலான பதவியைப் பெற்றார்.
கார்த்திகை அன்று தீபங்கள் ஏற்றி வைத்துவிட்டு மூன்று முறை தீபம் ஜோதி பரப்பிரம்ஹம்!, தீபம் சர்வ தமோபஹம் ! தீபேனே சாத்யதே சர்வம்! சந்த்யா தீப நமோஸ்துதே! என்ற ஸ்லோகத்தை சொல்வது மிகவும் விசேஷமான பலனைதரும்.
திருக்கார்த்திகை தினத்தில் குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்ற வேண்டும். தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் தீபம் ஏற்றியதும் வணங்க வேண்டும்.
கார்த்திகைத் திருநாளில் நெல் பொரியுடன் வெல்லப் பாகும், தேங்காய்த் துருவலும் சேர்த்து பொரி உருண்டைப் பிடித்து அண்ணாமலையாருக்கும் தீபங்களுக்கும் நிவேதனம் செய்கிறார்கள். வெள்ளை நிறப்பொரி திருநீறு பூசிய சிவனையும், தேங்காய்த் துருவல் கொடைத் தன்மை கொண்ட மாவலியையும், வெல்லம் பக்தர்களின் பக்தியையும் தெரிவிக்கின்றன. ஆத்மார்த்தமான பக்தியால் மகிழ்ந்து சிவன் நெற்பொரிக்குள்ளும் தோன்றுவார் என்ற தத்துவத்தால் இங்கு பெரிய நெற்பொரி உருண்டைகளும், அப்பமும் நிவேதனம் செய்யப்
படுகின்றன.
திருவண்ணாமலையில் உள்ள மலைமீது காணப்படும் செம்புக் கொப்பரையில் இருபத்து நான்கு முழம் துணி திரியாகப் போட்டு ஒரு மணங்கு கற்பூரம் அதனுடன் சேர்த்து சுற்றப் பெற்றிருக்கும். அதில் இருபது மணங்கு நெய் ஊற்றி தீபம் ஏற்றுவார்கள். இந்த ஜோதியைக் காண்பதற்கு பஞ்ச மூர்த்திகளும் எழுந்தருள்வதாக ஐதீகம். ஜோதியை சேவிக்கும் பக்தர்கள் பஞ்சமூர்த்திகளின் அருளால் பஞ்சேந்திரியங்களை அடக்கும் ஆற்றல் பெற்று மெய்ஞான வடிவினராக விளங்கலாம் என்பது உட்பொருள்.
- ஆர். மகாதேவன்