டோக்யோ: ஜப்பானின் மேற்குப் பகுதிகளில் இன்று கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது.
அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் டோட்டோரி பகுதியில் மையம் கொண்டு 10 கி.மீ. ஆழத்துக்கு உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
யூரிஹாமா பகுதியில் சில வீடுகள் இடிந்து தரைமட்டமானதாகவும், சில பகுதிகளில் தீ விபத்துகள் நேரிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்சாரம் பாதிக்கப்பட்டதை அடுத்து சுமார் 40 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக புல்லட் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.