காபூல் : மத்திய ஆப்கானிஸ்தான் பகுதியில் பொதுமக்கள் 30 பேரை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் கடத்திக் கொலை செய்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இது பற்றி ஆப்கன் அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஆப்கானிஸ்தானிலுள்ள கோர் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை அன்று ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர், பொதுமக்கள் 30 பேரை கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். இதில் பெண்களும் சிறுவர்களும் அடங்குவர்.
ஐஎஸ் தீவிரவாத அமைப்பினருக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் சமீபத்தில் சிறப்புத் தேடுதல் வேட்டை ஒன்றை நடத்தினர். இதில் அந்த அமைப்பைச் சேர்ந்த தளபதி ஒருவர் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி தரும் விதமாகவே ஐஎஸ் அமைப்பு பொதுமக்கள் மீது இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.